கடைசி நம்பிக்கையும் போச்சு... கேஜ்ரிவால் பற்றி அன்னா ஹசாரே 'பொளேர்'
டெல்லி: "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்வரிவால் மீதான எனது கடைசி நம்பிக்கையும் போய்விட்டது" என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் டெல்லி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சந்தீப் குமார், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி வெளியானதை அடுத்து, அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
"என்னுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இருந்த போது, கிராம சுயராஜ்யம் என்ற புத்தகத்தை எழுதினார். இப்போது டெல்லியில் நடந்து கொண்டிருப்பதுதான் கிராம சுயராஜ்யமா" என்று கேள்வி எழுப்பியுள்ள அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் மீதான தனது கடைசி நம்பிக்கையையும் போய்விட்டது என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் "இதற்கெல்லாம் கேஜ்ரிவாலிடம் பதிலே இல்லை. ஒருவர் எப்படி பட்டவர் என்பதை கண்டறிந்து, தவறுகள் ஏதுமற்றவர் என்பதை தெளிவுபடுத்திய பின்னர்தான் கட்சியில் சேர்க்க வேண்டும்" என்றும் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் இருப்பவர்கள் செய்யும் செயல்கள் தன்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.