இறந்ததாக சொல்லப்பட்ட டிவின்ஸில் ஒன்று உயிருடன் இருந்ததால் பெற்றோர் இன்ப அதிர்ச்சி!
டெல்லியில் இறந்துவிட்டதாக நினைத்து கொடுக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: இறந்துவிட்டதாக நினைத்து கொடுக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு டெல்லியின் ஷாலிமர்பா பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை. புகழ்பெற்ற இந்த மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று குறை பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்தது.
இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை
அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து இரட்டைக்குழந்தைகளை பாலித்தீன் கவரில் சுற்றில் புதைக்கும் இடத்திற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
உயிரோடிருந்த ஒரு குழந்தை
அப்போது கவரில் இருந்து குழந்தை அழும் சத்தம் வருவதை கேட்டு திடுக்கிட்ட அவர்கள், பையை பிரித்து பார்த்தப்போது அதில் ஒரு ஆண் குழந்தை உயிரோடு இருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம்
இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். மேலும் மேக்ஸ்மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தை கண்டித்து மருத்துவமனை முன்பு இன்று ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரோடிருக்க அறிகுறியில்லை
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர் தற்போது விடுப்பில் இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் குழந்தை உயிரோடிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
போலீசார் விசாரணை
மேலும் குழந்தையின் பெற்றோரிடம் தொடர்பிலேயே இருப்பதாகவும் தேவையான ஆதரவை அளிப்பதாகவும் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவமனையின் இந்த அலட்சியம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் அநீதிகள்..
கடந்த மாதம் கூர்கானில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரிடம் 2700 கையுறைகள் செலவிடப்பட்டதாக கணக்கு காட்டி 18 லட்சம் ரூபாய் வசூலித்தது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் மற்றொரு மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.