விபத்தில் சிக்கிய மாப்பிள்ளை... சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரியிலேயே நடந்த திருமணம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மணமகன் விபத்தில் சிக்கியதால், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே அவரது திருமணம் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று திருமணம் நடத்த நாள் குறிக்கப் பட்டிருந்தது.
வெளி நாட்டில் வேலை பார்த்து வந்த அப்துல் ரகுமான் திருமணத்தையொட்டி சமீபத்தில் ஊர் திரும்பினார். இந்நிலையில், கடந்த வாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அப்துல் ரகுமான் விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமணநாளுக்கு முன்னதாக அவர் குணமாகி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் முழுமையாக குணமடையாததால் மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து விட்டனர். இதனால் நிச்சயித்த படி அவரது திருமணத்தை நடத்த முடியாத சூழல் உருவானது. எனவே, திருமணத்தை தள்ளி வைக்க பெரியவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் மணமகள் ஹசீனாவோ குறிப்பிட்ட நாளில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது விருப்பப்படி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் எளிமையாக இனிதே நடந்து முடிந்தது.
இதில், இருவீட்டு பெரியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பிறகு தனது கணவர் அருகில் இருந்து அவரை அக்கறையுடன் ஹசீனா கவனித்து வருகிறார்.