ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைப்பு இன்று முதல் அமல்
ஹோட்டல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
டெல்லி : ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டிருப்பது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. வரி மாறுபாட்டைக் கலைந்து இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிக்கும் முறை தான் இந்த ஜி.எஸ்.டி. இதில் பல பொருட்களுக்கு அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்பட்டது.
ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக அறிவிக்கப்பட்டது. அதுவே ஏ.சி உணவகங்கள் என்றால் 18% என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனால் உரிமையாளர்களும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வரி விதிப்பால் ஹோட்டல்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம அஸ்ஸாமின் குவஹாத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடியது.
இக்கூட்டத்தில் 170க்க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. இதில் ஹோட்டல்களுக்கான வரியும் 5% ஆக குறைக்கப்பட்டது. அது ஏ.சி உணவகமாக இருந்தாலும், ஏ.சி இல்லாத உணவகமாக இருந்தாலும் இனிமேல் 5% வரி தான் வசூலிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. இன்று முதல் அந்த வரிக்குறைப்பு அமலுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விலை உயர்வின் காரணமாக ஹோட்டல்களின் வருவாய் குறைந்துள்ளது இப்போது இந்த வரிக்குறைப்பால் மீண்டும் மக்கள் ஹோட்டல்களுக்கு வருவார்கள். இது ஹோட்டல்கள் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு சிறப்பான செய்தி என்று கேரள உணவகங்கள் கூட்டமைப்பின் தலைவர் மொய்தீன்குட்டி ஹாஜி தெரிவித்து உள்ளார்.