தொடரும் மர்மம்... சுனந்தா சடலத்தை முதலில் கண்ட பெண் ஊழியர் திடீர் ராஜினாமா
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையும், உள்ளுறுப்பு சோதனை அறிக்கையும் வெவ்வேறு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், சுனந்தாவின் மரணத்தை முதலில் கண்டதாக கூறப்படும் ஓட்டல் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர் சென்றுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், தனது கணவருக்கும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்குமிடையே தகாத உறவு இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டுத் தெரிவித்தார். ஆனால், அதற்கடுத்த சில தினங்களிலேயே டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப் பட்டார் சுனந்தா.
அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சுனந்தாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகளவிலான மனத்தளர்ச்சி மாத்திரைகள் சாப்பிட்டதே மரணத்திற்குக் காரணம் என அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில் சுனந்தாவின் மரணம் தொடர்பாக டெல்லிப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உள்ளுறுப்புகள் சோதனைக்காக அனுப்பப் பட்டன. அந்த பரிசோதனையின் முடிவாக சுனந்தா விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், சுனந்தா இறந்த போது அவரது உடலில் மனத்தளர்ச்சி நிவாரண மாத்திரைகள் இருந்ததற்கான அறிகுறியும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்று சுனந்தாவின் சடலத்தை முதலில் பார்த்த ஓட்டல் ஊழியரைச் சந்திக்க முற்பட்டபோது அவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு அவரது சொந்த ஊர் சென்று விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
சுனந்தாவின் உடலை முதலில் கண்ட ஊழியரான எலிசபெத்தை போலீசார் சம்பவத்தன்று தவிர மீண்டும் ஒருமுறை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சொந்தக் காரணங்களுக்காக தனது பணியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி எலிசபெத் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
ஏன் எலிசபெத் அவ்வளவு அவசரம் அவசரமாக பணியை ராஜினாமா செய்தார். அப்படியானால் அவருக்கு ஏதேனும் உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே சுனந்தா மரணம் தொடர்பாக தற்போது வரை முதல் தகவல் அறிக்கையை தயாரிக்க முடியாத நிலை நீடிப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை உயர் அதிகாரி பி.எஸ்.பாசி கூறுகையில், ‘சுனந்தா விஷம் உட்கொள்ளவில்லை என முடிவுகள் கூறினாலும், இது போன்ற வேறு எதுவும் காரணங்களுக்கு வாய்ப்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப் படுகிறது. சுனந்தா மரணமடைந்து 2 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், முதல் தகவல் அறிக்கையை தயாரிக்க முடியாத நிலை நீடிப்பதாக கூறிய அவர், அதற்கான தேவையும் ஏற்படவில்லை' என இவ்வாறு தெரிவித்தார்.