கேரளாவில் வடிந்தது வெள்ளம்.. எங்கு பார்த்தாலும் சேறு. பாம்புகள் குடி கொண்ட வீடுகள்.. நீங்காத துயரம்
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெள்ளம் வடிந்தவுடன் வீட்டுக்கு சென்ற மக்கள் சேறும் சகதியும் பாம்பும் இருப்பதை கண்டு வேதனையடைந்தனர்.
கேரளத்தில் கடந்த 3 வாரங்களாக பெய்த மழையால் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து தற்போது மழை பெய்வது நின்றுவிட்டதால் அங்கு சில இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.
வெள்ளநீர் வடிந்ததால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி படையெடுத்தனர். அவர்களது வீடுகள் சேறும் சகதியுமாக இருந்ததை கண்டு வேதனை அடைந்தனர்.
பாம்புகள்
வீடுகளில் உள்ள களிமண்களில் பாம்புகள் காணப்படுகின்றன. மேலும் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் நல்லப்பாம்புகள் மிதக்கின்றன. இதனால் குழந்தைகளை வைத்து கொண்டு எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாமல் சிலர் கவலையடைந்தனர்.
களிமண்
சில வீடுகளில் வெள்ளம் ஆள் உயரத்துக்கு புகுந்துவிட்டதால் அடை அடையாக சேறு ஒட்டி கொண்டுள்ளன. உள்ளே செல்வதற்கே வழுக்கும் அளவிற்கு வழவழப்பான சேறுகளும் காணப்படுகிறது. வீடு நிலைகுலைந்ததால் சேறுகளில் விழுந்து கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களை பார்த்து மக்கள் வேதனை அடைகின்றனர்.
நாற்காலி நாசம்
வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், கிரைண்டர் , மிக்ஸி, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளின் சுற்றுச் சுவர்கள் இடிந்து காணப்படுகிறது. இன்னும் சில வீடுகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சில மரச்சாமான்கள் அடித்த வெள்ளத்தின் வேகத்துக்கு கீழே விழுந்து கிடக்கின்றன.
மண்வெட்டி மூலம் சுத்தம்
வீடுகளில் சேர்ந்துள்ள சேற்றை மக்கள் மண்வெட்டி மூலம் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வயிற்றை கட்டி வாயை கட்டி வாங்கிய வீடுகள் இதுபோல் இடிந்து விழுந்தும் விரிசல் விட்டும் கிடப்பதை பார்க்கும் மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.