ராஜஸ்தானில் 5,000 பேர் சூழ்ந்து தலித் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் வீடுகளுக்கு தீ வைத்த கொடூரம்!
ராஜஸ்தானில் தலித் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் வீடுகளை ஜாதி வெறியர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜாதி வெறியர்கள் 5,000 பேர் சூழ்ந்து பாஜக தலித் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் வீடுகளுக்கு தீ வைத்து வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். வட இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உடனடி கைது நடவடிக்கை கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் திட்டவட்டமான உத்தரவு. இது வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலித் அமைப்பினர் இந்த உத்தரவுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஆதிக்க ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இதனால் வட இந்தியாவே போர் களமாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 7 பேர் பலியாகினர்.
இதனிடையே ராஜஸ்தானில் ஆதிக்க ஜாதியினர் 5,000 பேர் பாஜகவின் தற்போதைய தலித் எம்.எல்.ஏ. ராஜ்குமார் யாதவ், முன்னாள் அமைச்சர் பெரொசிலால் யாதவ் ஆகியோர் வீடுகளை சூறையாடி தீக்கிரையாக்கினர். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
வட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.