சினிமா பாணியில் சுற்றி வளைத்த ரவுடிகள், டிஎஸ்பி உள்பட 8 போலீஸ்காரர்களை கொன்றது எப்படி?
கான்பூர்: சினிமா பாணியில் போலீசாரை சுற்றி வளைத்து ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள் தாக்கியுள்ளனர். இதில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத் அறிக்கைஅளிக்குமாறு மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஷ் துபே. இவர் மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பயங்கர ரவுடி விகாஷ் துபேவை பிடிக்க போன போது விபரீதம்.. 8 போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற கிரிமினல்கள்
டிஎஸ்பி தலைமையில்
இந்நிலையில் விகாஷ் துபே கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
இடைமறித்து தாக்குதல்
அப்போது போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த விகாஷ் துபே மற்றும் அவனது ஆட்கள் போலீசாரை தாக்குவதற்கு ஏதுவாக ஒரு கட்டிடத்தில் ஏறி மறைந்து நின்று கொண்டனர். போலீசார் வரும் வழியில் ஒரு ஜேசிபியை நிறுத்தி இடை மறித்துள்ளனர். போலீசார் இறங்கிய போது, அவர்களை கண் இமைக்கும் நேரத்தில் சுற்றி வளைத்து ரவுடி விகாஷ் துபேவின் ஆட்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
8 போலீசார் பலி
இந்த கொடூர தாக்குதலில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, மற்றும் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நான்கு காவலர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் மேலும் 4போலீசார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை விட்டு விகாஷ் துபேவின் ஆட்கள் தப்பிச் சென்றனர்.
4 பேர் நிலை கவலைக்கிடம்
இதனிடையே போலீசார் துப்பாக்கியால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து விரைந்து வந்த போலீஸ்படை காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தது. காயம் அடைந்த 4 போலீஸ்காரர்களின் நிலையும் கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிர் பலி அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. போலீசாரை கிரிமினல்கள் தாக்கி சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யா நாத், அறிக்கை அளிக்கும்படி காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளை தேடும் பணி சம்பவ இடத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.