படித்ததோ 4ம் வகுப்பு.. 40 வருடம் சாமியார்.. ரூ.10,000 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஆசாராம் பாபு
பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து 40 வருடம் தனி உலகம் ஒன்றையே உருவாக்கி வாழ்ந்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கும் சாமியார் ஆசாராம் பாபு, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வளர்ந்து 40 வருடம் தனி உலகம் ஒன்றையே உருவாக்கி அதை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்துள்ளார்.
ஒரு சாமியார் தன்னுடைய பேச்சு மூலம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பதற்கு உலகம் பல எடுத்துக்காட்டுகளை நமக்கு கொடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சாமியார்தான் இந்த ஆசாராமும். ஆனால் இவர் வெறும் சாமியார் மட்டுமில்லை. ஒரு பிசினஸ் மாடலாக இவரை மட்டும் எம்பிஏ படிப்பில் பாடமாக நடத்தி இருந்தால், பெரிய விஷயமாக இருந்திருக்கும்.
பொய்யும், புரட்டும் கூறி ஒரு மனிதர், தனியாக வெறும் 40 வருடத்தில் ரூ.10,000 கோடிக்கு சொத்து சேர்த்து இருக்கிறார் என்றால் இவர் வாழ்க்கை எப்படிபட்டதாக இருக்கும் என்று நினைத்து பாருங்கள். முக்கியமாக ஒரு நான்காம் வகுப்பு தாண்டாத ஆள், இவ்வளவு பெரிய மோசடியை செய்தது எப்படி என்று நினைத்து பாருங்கள்.
எங்கே பிறந்தார்
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்த 1941 காலகட்டம். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் அசுமால் சிறுமலானி என்ற கிராமத்தில் இந்து குடும்பம் ஒன்றில் பிறந்தார் இந்த ஆசாராம் பாபு. ஆனால் 7 வயது இருக்கும் போது, இந்தியா சுதந்திரம் அடைந்த உடன், குஜராத்திற்கு இடம்பெயர்ந்தனர். குஜராத்தில் பெரிய அளவில் வசதி இல்லாத நிலையில் மிகவும் மோசமான சிறிய வீடு ஒன்றில் வசித்ததாக இவரை பற்றிய ஆவண படம் ஒன்றில் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
படிப்பு
சிறு வயதில் இருந்து இவருக்கு படிப்பில் பிரச்சனை இருந்துள்ளது. அப்போது இவர் 4ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து இவர் தந்தை உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைகிறார். இவருக்கு அப்போதுதான் படிக்க வேண்டும் என்ற விருப்பம் வந்துள்ளது. ஆனால் அம்மாவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்.
என்ன செய்கிறார்
அவர் கிட்டத்தட்ட 23 வயது வரை இப்படி சிறிய சிறிய வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி இருக்கிறார். இதில் எந்த வேலையும் தெய்வீகம் சார்ந்த வேலை இல்லை என்று கூறப்படுகிறது. கட்டிட வேலை, குப்பை அள்ளுவது என்று நிறைய வேலைகளை பார்த்து இருக்கிறார். அவர் பழகும் நபர்களும் ஆன்மிகம் தொடர்புடைய நபர்கள் கிடையாது என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
வாழ்க்கை மாறியது
ஆனால் சரியாக 23 வயது இருக்கும் போது இவர் வாழ்க்கை மாறியது. இவர் சாம்ராஜ்ஜியத்தின் முதல் செங்கல் நடப்படுகிறது. இமயமலைக்கு சுற்றுலா சென்று இருந்த போது, அங்கு லிலாஸ் பாபு என்ற சாமியாரை பார்க்கிறார். அவர் இவரை பார்த்து ''நீ பெரிய சாமியாராக வரப்போகிறாய்'' என்று அருள் வழங்கி, ஆசாரம் சுவாமி என்று பெயர் வைக்கிறார். வெளியே சென்று மக்களுக்கு வழிகாட்டு என்றும் கூறியுள்ளார். ஆனால் ஆசாராம் காட்டிய வழி மிக மோசமானது என்பது வேறுகதை.
கொஞ்சம் கொஞ்சமாக
ஆனாலும் அவர் சாமியாராக மாறி உடனே புத்தகம் எழுத தொடங்கவில்லை. 70 வயது வரை அப்படி இப்படி கோவில் கோவிலாக சுற்றி சுற்றி பல சொற்பொழிவுகளை கேட்டு மனத்திற்குள் பேசி, ஒரு சாமியார் எப்படி இருக்க வேண்டும் என்று ''ஸ்டெடி'' செய்து இருக்கிறார். சரியாக 70 வயதில் சபர்மதி அருகே இருக்கும் மொடேரா பகுதியில் ''மோக்ஷா குதிர்'' என்ற பெயரில் சிறிய குடில் ஒன்றை ஆரம்பிக்கிறார். தனக்கு தானே ''சாந்த் ஆசாராம்ஜி பாபு'' என்று பட்டம் கொடுத்துக் கொள்கிறார்.
முழு சாமியார்
அப்படியே இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெண்தாடி வளர ஆரம்பிக்கிறது. இளமையில் கேட்ட சொற்பொழிவுகளை மக்களிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக கல்லா கட்டுகிறார். சாமியார் வியாபாரமும் வளர ஆரம்பிக்கிறது. சின்ன குடில் குடிசை ஆனது. குடிசை கட்டிடம் ஆனது. கடைசியில் கட்டிடம் சிறிய மாடி கட்டிடம் ஆகி ஆசிரமம் ஆனது. முழு சந்திரமுகியாக மாறிய கங்கா போல முழு சாமியாராக மாறினார்.
பெரிய வளர்ச்சி
அதன்பின் அவர் வளர்ச்சி மிகவும் அசாத்தியமானது. 40 வருடம். இந்தியா முழுக்க ஆசிரமம் அமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டார். கிட்டத்தட்ட இவர் சென்று மட்டும் 400க்கும் அதிகமான ஆசிரமங்களை திறந்து வைத்து இருக்கிறார். இவர் ''ம்ம்ம்'' என்றால் ''ஓஒ'' என்ற கத்த லட்சக்கணக்கில் பக்தர்களை சேர்த்தார். கஷ்டத்தில் உலவும் ஏழைகள் மட்டுமல்ல இந்தியாவின் டாப் பிஸினஸ்மேன்கள் தொடங்கி பணத்தில் விளையாடும் அரசியல் தலைகள் வரை இவர் சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.
முதல் பிரச்சனை
அப்போதுதான் இவருக்கு முதல் அடி விழுந்தது. 2008ல் குஜராத்தில் அவரது ஆசிரமத்தின் நீர்நிலை பகுதியில் தீப்ஸ், அபிஷேக் என்ற இளைஞர்களின் உடல்கள் பிணமாக கிடந்தது. அந்த ஆசிரமத்தில் வேலை செய்த இளம் சாமியார்கள் அவர்கள். இவர்கள் எப்படி இருந்தார்கள் என்று இப்போதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஆசாராம் தப்பித்தார். மொத்தம் 7 பேர் இதில் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இவர் மீது மக்கள் கவனம் வேறுமாதிரி விழ ஆரம்பித்தது.
குற்றச்சாட்டு
அதன்பின் 2013ல் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு ஆசாராம் மீது சுமத்தப்பட்டது. 2013 அக்டோபர் 6ம் தேதி இவர் மீது புகார் அளிக்கப்பட்டு பின் பெரிய தலையீடுகளுக்கு பின் பல மாதம் கழித்து விசாரணை தொடங்கியது. இவர் மீதும் இவரது ஆசிரம ஆட்கள் சிலர் மீது, ஆசாராமின் மகன் மீதும் புகார் வைக்கப்பட்டது. இவ்வளவு வருடம் நடந்த வழக்கில் இன்று இவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
சொத்து முடக்கம்
இவருக்கு சொந்தமாக ரூ.10000 கோடி மதிப்பிற்கு பல இடங்களில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் முறைகேடாக வந்தது என்று எல்லாம் இப்போது முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் இவரின் சொத்துக்கள் பல முடக்கம் செய்யப்படாமல், யாருக்கும் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கை கவனித்து வரும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய பயங்கரம்
இவ்வளவு குற்றம் ரூ. 10000 கோடி சேர்த்த இவருக்கு இன்னும் இவரது பக்தர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்கிறார்கள். இவர் வைத்து இருக்கும் சொத்துக்களை முடக்கிய அரசால் இவர்களை எதுவும் செய்ய முடியாது .அந்த 10000 கோடி எவ்வளவு தீய விஷயங்களை செய்யுமோ அதைவிட பெரிய தீய விஷயங்களை அவரின் ''இந்த'' சொத்துக்கள் செய்யும். இத்தனை மோசடியையும் 4ம் வகுப்பில் பாதியில் பள்ளியில் இருந்து வெளியேறிய அந்த சிறுவன்தான் செய்தான் என்றால் நம்ப முடிகிறதா?