மொத்தமாக "கை"யில் குத்திய தமிழர்கள்.. ஷாக்கில் பாஜக.. இப்படித்தான் மலர மறுத்தது "தாமரை"
Recommended Video
பெங்களூரு: பெங்களூருவில் எதிர்பார்த்த வெற்றியை பாஜக பெறத் தவறியதால்தான் அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போய் விட்டது. பாஜகவின் கனவை நாசமாக்கியதில் தமிழர்களின் பங்கு மிகப் பெரியது.
பெங்களூரு கிட்டத்தட்ட காங்கிரஸ் பக்கமே சாய்ந்தது. பெங்களூரு நகரில் மொத்தம் 28 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அதில் 2 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவில்லை.
தேர்தல் நடந்த 26 தொகுதிகளில் 13 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. பாஜகவுக்கு 11 இடங்கள் கிடைத்தன. மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 2 சீட் கிடைத்தது.
எதிர்பார்த்து ஏமாற்றம்
நகர்ப்புற வாக்காளர்கள்தான் பாஜகவின் பெரும் பலம். அந்த வகையில் பெங்களூரு எப்படியும் நமக்கு கிடைத்து விடும். எளிதாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது பாஜக. ஆனால் பெங்களூரு மக்கள் ஏமாற்றி விட்டனர்.
கைக்கு விழுந்த வாக்குகள்
வழக்கம் போல பெங்களூருவின் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தது. 13 தொகுதிகளை அது அள்ளி விட்டது. இதுதான் பாஜகவை பெரிதாக பதம் பார்த்து விட்டது.
தமிழர்கள் நிராகரிப்பு
பாஜக பெரும் தோல்வி அடைய இன்னொரு முக்கியக் காரணம் தமிழர்களின் வாக்குகள் காங்கிரஸுக்குப் போய் விட்டதால்தான். காங்கிரஸுக்கே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து விட்டனர். இதை பாஜக எதிர்பார்க்கவில்லை.
கட்டா சுப்ரமணியம் அதிர்ச்சி
சில தொகுதிகளில் பாஜகவுக்கு தமிழர்களின் வாக்குகள் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சிவாஜி நகரில் பாஜக வேட்பாளர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்குள்ள பெரும்பான்மை தமிழ் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் வேட்பாளர் ரோஷன் பெய்க்குக்குப் போய் விட்டது.
15 சீட் கிடைத்திருந்தால்
பெங்களூரில் மட்டும் 15 சீட்களுக்குக் குறி வைத்திருந்தது பாஜக. ஆனால் கிடைத்தது 11 மட்டுமே. பாஜக குறி வைத்த 15 சீட்டுகளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் வென்று விட்டன.
பெங்களூரு பாஜகவை கைவிட்டதே அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகம் என்பது குறிப்பிடத்தக்கது.