பாஜகவுக்கு எப்படி தேர்தல் தேதி முன்னரே தெரியும்? தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் கசியவிடப்படுகின்றனவா?
கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் முன்கூட்டியே அறிவித்தது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் முன்கூட்டியே அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பாஜக வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது என்கிற புகாரை இது உண்மையாக்குவதாக சந்தேகிக்கின்றனர் பொதுமக்கள்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவின் தாமரை சின்னத்துக்கே வாக்குகள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது நீண்டகால புகார். உத்தரப்பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல்களின் போதும் இத்தகைய புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சீட்டு பயன்படுத்தப்பட்ட இடங்களில் பாஜக தோல்வியைத் தழுவியிருந்தது இந்த சந்தேகத்தை அதிகரித்திருந்தது. தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜகவின் ஐடி விங் ட்விட்டரில் வெளியிட்டது.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே மே 12-ந் தேதிதான் வாக்குப் பதிவு என்பது பாஜகவினருக்கு எப்படி தெரிய வந்தது? என்பதுதான் இப்போது சர்ச்சை. தேர்தல் ஆணையத்தின் அத்தனை நடவடிக்கைகளும் பாஜகவுக்கு ரகசியமாக அறிவிக்கப்படுகிறதா? என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
அண்மையில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையை மிகவும் தாமதமாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிட்டனர். அதுவும் பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால் தாமதமாகவே முடிவுகளை அறிவித்தனர்.
ஏனெனில் பாஜக மோசமான வாக்குகளை பெற்றிருந்ததால் தேர்தல் அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டனர். இப்போது கர்நாடகா தேர்தல் தேதியை முன்கூட்டியே பாஜக ஐடி விங் அறிவித்திருக்கிறது.
அப்படியானால் வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெறுகிறது என்கிற புகாரும் உண்மைதானா? தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு இத்தகைய மோசடிகளில் பாஜக ஈடுபடுகிறதா? என்கிற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.