உ.பியில் பாஜகவின் 9வது எம்.பி.க்கு எப்படி வெற்றி கிடைத்தது?
உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜகவின் 9வது எம்பிக்கு எப்படி வெற்றி கிடைத்தது.
லக்னோ : பாஜகவிற்கு இருக்கும் எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து 8 எம்பிகள் எளிதாக தேர்வு செய்யப்பட்டாலும் 9வது எம்பிக்கான வெற்றி எப்படி அமையப் போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிஎஸ்பி எம்எல்ஏ அணி மாறி ஓட்டு போட்டது, சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு என்று வெற்றியை தனதாக்கிக் கொண்டார் பாஜகவின் எம்.பியாகியுள்ள அனில் அகர்வால்.
எம்எல்ஏக்கள் மாற்றி ஓட்டு போட்டது, இரண்டு மணி நேர தாமதம் உள்ளிட்டவை உத்திரபிரதேச ராஜ்யசபா தேர்தலில் அரங்கேறியுள்ளது. ஒருவழியாக வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் பாஜகவில் 9 எம்பிகளும், சமாஜ்வாதிகட்சியில் ஒரு எம்பியும் வெற்றி பெற்றுள்ளார், பகுஜன் சதமாஜ் கட்சிக்கு வெற்றி மிக அருகில் இருந்தும் கைக்கு எட்டாமல் போய்விட்டது.
கோரக்பூர், பூல்புர் லோக்சபா இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து போட்ட கூட்டணி ராஜ்யசபா தேர்தலிலும் தொடர்ந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவால் சமாஜ்வாதி கட்சி இரண்டு லோக்சபா இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றது. இதற்கு பலனாக ராஜ்யசபா தேர்தலில் தங்களிடம் கூடுதலாக இருந்த எம்எல்ஏக்களின் வாக்குகளை பிஎஸ்பியின் எம்பி வேட்பாளருக்கு ஆதரவாக அளித்தனர். எனினும் பாஜகவின் அனில் அகர்வால் 9வது எம்பியாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
எம்எல்ஏக்கள் மாற்றி வாக்களிப்பு
அனில் அகர்வாலுக்கும் பிஎஸ்பியின் பீம்ராவ் அம்பேத்கருக்கும் 33 வாக்குகளை யார் பெறப்போகிறார்கள் என்பதில் கடும் போட்டி நிலவியது. அம்பேத்கருக்கு சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருந்தது. அனில் அகர்வாலுக்கு கிடைத்தது போல பிஎஸ்பி வேட்பாளர் அம்பேத்கருக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. பிஎஸ்பி மற்றும் சமாஜ்வாதி இரண்டு கட்சிகளின் 2 எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி ஆதரவளித்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.
5 எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியவில்லை
நிஷாத் கட்சியின் எம்எல்ஏ பாஜகவிற்கு வாக்களித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் இருக்கின்றனர், மற்றொரு பிஎஸ்பி எம்எல்ஏ முக்தார் அன்சாரி மற்றும் சமாஜ்வாதியின் ஹரிஓம் யாதல் உள்ளிட்டோர் வாக்களிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சமாஜ்வாதி பகுஜன் சமாஜ்வாதி கூட்டணிக்கு 5 வாக்குகள் கிடைக்காமல் போனது.
பாஜகவுக்கு வாக்களித்த பிஎஸ்பி எம்எல்ஏ
பகுஜன் சமாஜ் கட்சியின் அனில் சிங் தான் பாஜகவிற்கு வாக்களித்ததாக கூறினார். வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்ற அனில் சிங் பாஜக வேட்பாளருக்கே தனது வாக்கு என்று உறுதியளித்துவிட்டு வந்துள்ளார். இதே போன்று சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் தலைவர் நரேஷ் அகர்வாலின் மகனுமான நிதி அகர்வாலும் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். சுயேச்சை எம்எஎல்ஏஏ அமன் மணி திரிபாதியின் வாக்கும் பாஜகவிற்கே கிடைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
நேற்றைய தினம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் உ.பியில் மொத்தம் 400 எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரு மணி நேரம் முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அதன் பின்னர் பல நாடகங்கள் அரங்கேறின. எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களித்தது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்கு முன்னர் கட்சி ஏஜென்டுகளிடம் அவற்றை காட்டவில்லை என்று சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி குற்றம்சாட்டின, இது தேர்தல் நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
பிஎஸ்பி வேட்பாளருக்கு பறிபோன வாய்ப்பு
இறுதியில் பாஜக 324 எம்எல்ஏக்களின் வாக்குகளை பெற்று 8 எம்பிகளை எளிதாக தேர்ந்தெடுத்தது, 9வது எம்பிக்கு 37 வாக்குகள் தேவைப்பட்டது. சமாஜ்வாதி கட்சிக்கு 47 எம்எல்ஏக்கள் இருந்ததால் அந்த கட்சியின் சார்பிலும் ஒரு எம்பி எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் இருந்தனர், இவர்களில் ஒருவர் சிறையிலும், மற்றொருவர் மாற்றியும் வாக்களித்ததால் இந்தக் கட்சியின் வேட்பாளருக்கு 17 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வெற்றி பெற தேவையான 20 வாக்குகள் இல்லாததால் வெற்றி வாய்ப்பு பிஎஸ்பியிடம் இருந்து தவறியது.