சர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடுப்பது ? - மனுதாரரிடமே ஆலோசனை கேட்கும் உச்ச நீதிமன்றம் !
டெல்லி: சீக்கியர்களை புண்படுத்தும் விதமாக இணையதளங்களில் பரவி வரும் சர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடுப்பது என்று நீங்களே சொல்லுங்கள் என்று மனுதாரர்களிடமே கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.
சீக்கிய மதத்தினருக்கு எதிராக இணையதளங்களில் வலம் வரும் சர்தார்ஜி ஜோக்குகளை தடை செய்யுமாறு குருத்வாரா நிர்வாகக் குழுவை சேர்ந்த சீக்கிய வழக்கறிஞர் ஹர்வீந்தர் சவுத்ரி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் மனு ஒன்றை உச்ச நீதிமனறத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "சீக்கியர்களை புண்படுத்தும் விதமாக இருக்கும் சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்கவேண்டும். மேலும் இணையதளங்களில் உலவும் சர்தார்ஜி ஜோக்குகளுக்கும், அந்த ஜோக்குகளை கொண்ட இணையதளங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மூலம் தடை விதிக்க வேண்டும். தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர், சீக்கிய மதத்தைச் சேர்ந்த பலர் முக்கிய தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். முன்னாள் பிரதமர் கூட சீக்கியர் தான் என வாதாடினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்,
"இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதி விக்ரம் சிங்கும் ஒரு சீக்கியர் தான். வெகுவிரைவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கப் போகிறவரும் சீக்கியர் தான். ஆனால், இது போன்ற ஜோக்குகளுக்கு தடை விதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இரண்டு தனிப்பட்ட நபர்கள் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக்கொண்டால் அதை எப்படி நீதிமன்றத்தால் தடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சர்தார்ஜி ஜோக்குகளை எப்படி தடை செய்வது என்பது குறித்து ஆறு வாரங்களுக்குள் மனுதாரர்களே ஆலோசனை வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.