திரிபுரா, நாகாலாந்தில் காங்கிரஸுக்கு 'சங்கு' ஊதிய பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்' சிபி ஜோஷி
திரிபுரா, நாகலாந்தில் காங்கிரஸ் பேரழிவை சந்திக்க காரணமே அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சிபி ஜோஷி என அக்கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர்.
அகர்தலா/கோஹிமா: திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. இதற்கு காரணமே காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில பொறுப்பாளரான சிபி ஜோஷிதான் என குற்றம்சாட்டுகின்றனர் அக்கட்சியின் தலைவர்கள்.
2013-ம் ஆண்டு திரிபுராவில் காங்கிரஸ் 36.53% வாக்குகளைப் பெற்றது. சட்டசபையில் 10 எம்.எல்.ஏக்களையும் பெற்றிருந்தது.
ஆனால் 5 ஆண்டுகளில் அந்த கட்சி அழிந்துவிட்டது. தற்போதைய சட்டசபை தேர்தலில் வெறும் 1.8% வாக்கைத்தான் பெற்றிருக்கிறது. பாஜகவோ 43.0% வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது.
இன்று 2% வாக்கு
நாகாலாந்தில் 2013 சட்டசபை தேர்தலில் 24.89%. வாக்குகளைப் பெற்று 8 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்தது. தற்போது 2.1% வாக்குகளைத்தான் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. திரிபுராவிலும் நாகாலாந்திலும் காங்கிரஸ் கட்சி அழிந்து போய்விட்டது.
ராகுல் அலட்சியம்
திரிபுராவில் வாக்குப் பதிவுக்கு முன்னர் பிப்ரவரி 16-ந் தேதி நடைபெற்ற ஒரே ஒரு பொதுக் கூட்டத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். ஆனால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் திரிபுரா பிரசார களத்தில் அதளப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஜோஷியால் நாசம்
இது தொடர்பாக நாகாலாந்து காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கெவே காபே தெரி, இந்த அவமானகரமான தோல்விக்கு காரணமே வடகிழக்கு மாநில மேலிட பொறுப்பாளர் சிபி ஜோஷிதான். கடந்த 2 ஆண்டுகளில் ஒருமுறை கூட நாகாலாந்துக்கு ஜோஷி வந்ததே இல்லை. ராகுல் காந்தியை பிரசாரத்துக்கு வரவிடாமல் தடுத்ததும் ஜோஷிதான்.
செலவுக்கு கூட பணம் இல்லை
அவரால்தான் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. டெல்லி மேலிடத்தில் இருந்து எந்த ஆதரவும் மாநில காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. தேர்தல் செலவுக்கும் கூட பணத்தை தரவில்லை. நாகாலாந்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த வடகிழக்கையும் கை கழுவி விட்டது காங்கிரஸ். எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களுமே நாகாலாந்தில் பிரசாரத்துக்கு வரவில்லை. இதில் இருந்தே அவர்கள் எப்படி அக்கறையுடன் இருக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ளலாம். மேகாலயா மாநிலத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டியது காங்கிரஸ். அங்கும் கூட ஆட்சி அமைக்க போராடி வருகிறது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.