பணமதிப்பிழப்பிற்கு பின் 500, 2000 ரூபாய் கள்ளநோட்டு அடிப்பது அதிகமாகி உள்ளது.. ஆர்பிஐ அதிர்ச்சி!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அடிப்பது அதிகமாகி உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2000, 500 ரூபாய் கள்ளநோட்டுகள் அடிப்பது அதிகமாகி உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
2016 வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது எந்த விதமான பலனும் ஏற்படவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 99.3 சதவிகித நோட்டுகள் மீண்டும் வந்துவிட்டது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
அளித்த வாக்குறுதி என்ன?
இந்த புதிய ரூபாய் நோட்டுகளில், சிப் இருக்கிறது, இதனால் கருப்பு பணம் ஒழியும் என்று நிறைய பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் அதெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று சில நாட்களுக்கு உள்ளாகவே எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், இதனால் கள்ளநோட்டு அச்சடிப்பது குறையும், இதனால் தீவிரவாதிகள் கஷ்டப்பட போகிறார்கள் என்று பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதிகம் ஆகியுள்ளது
அந்த அளவிற்கு இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக கள்ளநோட்டு அடிப்பது இப்போதுதான் அதிகம் ஆகியுள்ளது. ஆம், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் சென்ற ஆண்டை விட அதிக அளவில் கள்ளத்தனமாக அடிக்கப்படுகிறது. மாறாக 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அடிப்பது அடியோடு குறைந்து போய் உள்ளது.
எவ்வளவு அதிகம்
500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் கள்ளத்தனமாக அடிக்க எளிதாக இருப்பதால் இப்படி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மொத்தம் 17,929 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் இந்த வருடம் அடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 35858000 ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டை விட 2710 சதவிகிதம் அதிகம் ஆகும். சென்ற வருடம் 638 எண்ணிக்கையிலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அடிக்கப்பட்டு இருக்கிறது.
500 ரூபாய் நோட்டுகள்
அதேபோல் 500 ரூபாய் நோட்டுகள் அடிப்பதும் கணிசமாக அதிகரித்துள்ளது. 9,892 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இந்த வருடம் அடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு 4946000 ரூபாய் ஆகும். இது சென்ற ஆண்டை விட 4178 சதவிகிதம் அதிகம் ஆகும். சென்ற வருடம் 199 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அடிக்கப்பட்டு இருக்கிறது.