பொறுக்க முடியாத தோல்வி! திரண்ட ரசிகர்கள்.. திணறிய போலீஸ்! இந்தோனேசியா கால்பந்து கலவரம்! நடந்தது என்ன
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் நடந்த வன்முறையில் 129 பேர் பலியான நிலையில், அந்த வன்முறை எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
மற்ற விளையாட்டுப் போட்டிகளைக் காட்டிலும் கால்பந்து ரசிகர்கள் சற்றே ஆக்ரோஷமானவர்கள். தங்களுக்குப் பிடித்த அணியின் வெற்றி, தோல்வி என்பதை அவர்கள் ரொம்பவே பார்சனலாக எடுத்துக் கொள்வார்கள்..
இதனால் கால்பந்து போட்டிகளில் பல நேரங்களில் வன்முறை நடந்துள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் பல சமயங்களில் கால்பந்து போட்டிகளின் போது இப்படி வன்முறை நடந்துள்ளன.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 127 பேர் பலி; 180 பேர் படுகாயம்
இந்தோனேசியா வன்முறை
அப்படித்தான் நேற்றிரவு இந்தோனேசியாவில் கால் பந்து போட்டியில் வன்முறைச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தோனேசிய லீக் கால்பந்து போட்டியில் அந்நாட்டின் இரு பெரிய அணிகள் மோதிக் கொண்ட லீக் போட்டியில் தான் இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இதில் குறைந்தது 129 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எப்படி நடந்தது
இந்தோனேசிய லீக் கால்பந்து தொடரில் அரேமா எஃப்சி மற்றும் பெர்செபயா சுரபயா இரண்டும் முக்கிய அணிகள் ஆகும். இவை லீக் போட்டி ஒன்றில் நேற்றிரவு மோதிக்கொண்டன. கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் நகரில் அரேமா எஃப்சியின் சொந்த மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இரு பெரிய அணிகள் மோதிக் கொள்வதால் மைதானத்தில் அதிகப்படியான மக்கள் கூடி இருந்தனர்.
முற்றுகை
அரேமா எஃப்சி-க்கு சொந்தமான மைதானம் என்பதால் அந்த அணியின் ரசிகர்கள் சற்று அதிகமாகவே கூடி இருந்தனர். விறுவிறுப்பாகச் சென்ற அந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அரேமா எஃப்சி அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அணியின் ரசிகர்கள் மைதானத்தை நோக்கி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணீர்ப் புகை கண்டுகள்
இரு அணி ரசிகர்களும் மைதானத்திலேயே மோதிக் கொண்டனர். அரேமா எஃப்சி ரசிகர்கள் பெர்செபயா சுரபயா தாக்கியுள்ளனர். இதன் காரணமாக மைதானத்திலேயே ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டு உள்ளது. நிலைமை கையைவிட்டுப் போவதை என்பதை உணர்ந்த போலீசார், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். இருப்பினும், இது மேலும் குழப்பத்திற்கே வழிவகை செய்துள்ளது.
129 பேர் பலி
இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும் மூச்சுத் திணறல் காரணமாகவும் அங்குப் பலர் உயிரிழந்தனர். இரு போலீசார் உட்பட குறைந்தது 129 பேர் இந்த வன்முறையில் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழந்து உள்ளனர். அதேபோல இதில் காயமடைந்த சுமார் 180க்கும் மேற்பட்டவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஷாக் வீடியோ
இந்த வன்முறை தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் மைதானத்திற்கு நடுவே இரு அணிகளும் மோதிக் கொள்வதும். திடீரென கண்ணீர்ப் புகை கண்டுகள் வீசப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட போலீசார் ரசிகர்களை மீது தடியடி நடத்திக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
போலீசே காரணம்
அதேநேரம் இந்த வன்முறைக்கும் இத்தனை பேர் பலியானதற்கும் போலீசாரே காரணம் என்று இந்தோனேசிய போலீஸ் கண்காணிப்புக் குழு தெரிவித்து உள்ளது. கால்பந்து போட்டிகளுக்கு முறையான பாதுகாப்பை வழங்கவில்லை என்று அவர்கள் சாடியுள்ளன. வன்முறையையும் முறையாகக் கையாளவில்லை என்று சாடிய அவர்கள், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று இந்தோனேசிய போலீஸ் தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் சாடியுள்ளனர்.