ஃபோர்டு பவுண்டேசனிடம் நிதி உதவி பெற்ற அரசியல் கட்சி... திடுக் தகவல்கள்
டெல்லி: சர்ச்சைக்குரிய ஃபோர்டு பவுண்டேசனிடம் அரசியல் கட்சி ஒன்று நிதி உதவி பெற்றது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பானது சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் சபரங் டிரஸ்ட் போன்ற என்.ஜி.ஓக்களுக்கு நிதி உதவி அளித்தது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு அரசியல் கட்சிக்கும் ஃபோர்டு பவுண்டேசன் நிதி உதவி அளித்தது தெரியவந்துள்ளது.
இந்த நிதி உதவியானது எப்படி அரசியல் கட்சிக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக ஃபோர்டு பவுண்டேசன் மற்றும் அந்த அரசியல் கட்சி விளக்கம் அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நிதி உதவி அளிக்கவில்லை என ஃபோர்டு பவுண்டேசன் கூறியிருக்கிறது. ஆனால் விசாரணை நடத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளோ, ஃபோர்டு பவுண்டேசன் மறைமுகமாக நிதி உதவி அளித்தது என்பதை உறுதி செய்துள்ளனர்.
அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தலைவர் நடத்தி வரும் என்.ஜி.ஓ. அமைப்புக்கு ஃபோர்டு பவுண்டேசன் நிதி உதவி செய்துள்ளதையும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது என்.ஜி.ஓ மூலமாக நிதியைப் பெற்று பின்னர் கட்சிக்கு கொண்டு வந்திருக்கிறார் அந்த தலைவர்.
இது முழுவதுமே சட்டவிரோதம் என்கின்றனர் அதிகாரிகள். வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்கு சட்டத்தின் படி வெளிநாட்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளிக்கக் கூடாது. இதை அந்த அரசியல் கட்சி மீறியுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள். இதனால் அந்த அரசியல் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
60 words