கவுரி லங்கேஷ் 'சம்பவம்' செய்யப்பட்டார்.. திட்டம் போட்டது எப்படி? கொலையாளி பரபர வாக்குமூலம்
மும்பை: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் எப்படி கொலை செய்யப்பட்டார், எப்படி திட்டம் தீட்டப்பட்டது என்பது பற்றி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத் கலாஸ்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூர் நகரில், தனது வீட்டுக்கு வெளியே வைத்து, கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் தபோல்கர் வாக்கிங் சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்பூர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இவர்கள் அனைவருமே, இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பதால், கொலைகள் நடுவே ஏதோ இணைப்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சரத் கலாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவர் கர்நாடக காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது 26 வயதேயான, பரசுராம் வாங்மேர் என்றும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சரத் கலாஸ்கர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: 2016ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், பெல்காமில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. கவுரி லங்கேஷ் பெயரும் அதில் ஒன்று. கவுரி லங்கேஷ் கொல்லப்பட வேண்டும் என்று, அந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாரத் குர்னே என்பவர் வீட்டில் நடந்த அடுத்த கூட்டத்தில், கொலை பற்றி, விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது. கூட்டத்தின் முதல் நாளில், அமோல் காலே (வலதுசாரி குரூப்பின் மூளையாக செயல்பட்டவர்), ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொறுப்புகளை வழங்கினார். இந்த கொலைக்கு "சம்பவம்" (Event) என்று குறியீட்டு பெயர் சூட்டப்பட்டது.
பின்னர் அமோல் காலே அனைவரையும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பச் சொன்னார், 'சம்பவ' நாளில் மட்டுமே திரும்பி வர வேண்டும் என்று கூறினார். கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகு, ஆதாரத்தை அழிக்கும் நோக்கத்தில், அந்த துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மும்பை-நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு சிற்றோடையின் 3 பகுதிகளில் வீசி எறிந்தேன். இவ்வாறு சரத் கலாஸ்கர் வாக்குமூலம் அளித்துள்ளார்.