கடிதங்கள் மூலம் புரட்சி.. புல்லட் ரயிலுக்கு எதிராக குஜராத் விவசாயிகள் போராட்டம்.. முதல் வெற்றி!
புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக போராடி முதற்கட்ட வெற்றியை சுவைத்து இருக்கிறார்கள் குஜராத் விவசாயிகள்.
டெல்லி: புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராக போராடி முதற்கட்ட வெற்றியை சுவைத்து இருக்கிறார்கள் குஜராத் விவசாயிகள்.
புல்லட் ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்பட இருந்தது. 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும். இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது.
புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. மோடியின் கோட்டையான குஜராத்திலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது பாஜகவை அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடிதம் அளித்தனர்
இந்த போராட்டத்தில் குஜராத் விவசாயிகள் செய்த மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜப்பான் அரசுக்கு அவர்கள் எழுதிய கடிதம்தான். 1000க்கும் அதிகமான விவசாயிகள் தனி தனியாக ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்த திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு அனுப்பி உள்ளனர்.
ஜப்பான் நிறுவனத்திற்கும் கோரிக்கை
அது மட்டும் இல்லாமல், இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதே கடிதத்தை தனியாக அனுப்பி இருக்கிறார்கள். எவ்வளவு விவசாய நிலம் பறிபோகிறது, எத்தனை மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள், விவசாயத்தை நம்பி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
வழக்கு தொடுத்தனர்
அதே சமயம் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் இந்த திட்டத்திற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் நிலம் முறையின்றி பறிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் சார்பில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு போராட்டம்
தமிழ்நாட்டிலும் மக்கள் இதேபோல் அமைதி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்படி ஒரு வெற்றியை விவசாயிகள் ருசிக்க முடியவில்லை. சேலம் சாலை பிரச்சனை இன்னும் தீராமல் உள்ளது. ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் ஒரு நிறுவனம் சென்றால் அடுத்த நிறுவனம் வருகிறது. பல போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்தாலும் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் விடிவுகாலம் பிறப்பதே இல்லை.