மனிதர்களை மிரட்டும் மலேரியா!
டெல்லி: இந்தியாவில் 28 கோடி பேரை மலேரியா நோய் தாக்கும் அபாயம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மலேரியா நோய் தாக்குதல் அதிகரித்தாலும் அதனால் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மலேரியா மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி பேர் மலேரியா நோய் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். தற்போது 12 கோடியே 80 லட்சம் பேரை இந்த நோய் தாக்கியிருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஆனால் 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 7 சதவீதம் மலேரியா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 105 நாடுகளில் 330 கோடி பேர் மலேரியாவின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிரார்கள். ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் பேர் மலேரியாவால் மரணம் அடைகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து "Indiaspend" இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையிலிருந்து...
மலேரியாவினால் ஆண்டுதோறும் 7,81,000 பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், நோய் முற்றி உடலுறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன.
அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்பமண்டலம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது. மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். இது பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இந்த நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் வழக்கத்தில் இருக்கிறது.
கொசுக்கள் மூலம் மலேரியா காய்ச்சல் பரவுகிறது என்பதை திரு. ரொனால்டு ரோஸ் என்ற இங்கிலாந்து மருத்துவர் கண்டுபிடித்தார். இவருக்கு 1902 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அனோபிலஸ் வகை பெண் கொசு மலேரியா நோய்க்கு காரணமான பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியை மனிதர்களிடம் பரப்புகின்றன.
98 சதவிகித உயிரிழப்பு
ஆப்பிரிக்காவில் 30 நாடுகள், ஆசியாவில் 5 நாடுகள் என 35 நாடுகளில்தான் 98 சதவீத மலேரியா உயிரிழப்பு ஏற்படுகிறது. உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. அதே போல, ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி., / எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து 2வது இடத்தில் மலேரியா உள்ளது.
உயிர்கொல்லிகள்
எய்ட்ஸ், காசநோய், நிமோனியா, மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு, மலேரியா, தோல்நோய்கள் இந்தியாவின் 6 முக்கிய உயிர்கொல்லி நோய்களாகும்.
பில்கேட்ஸ் நிதி உதவி
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவருமான பில் கேட்ஸ் மலேரியா, நிமோனியா, வாந்திபேதி போன்ற நோய்கள், மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களை கட்டுப்படுத்த கேட்ஸ் தொண்டு நிறுவனத்தில் இருந்து 2014ம் ஆண்டில் சுமார் 500 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கியுள்ளார்.
ஒழிக்க உறுதி
மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் எபோலா நோயால் தாக்கத்திற்குள்ளான மக்களுக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுகள் வழங்க உதவியதாகவும், மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்து பொருட்களை வழங்கவும் உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார். மலேரியாவை ஒழிக்க உறுதியோடு இருக்க வேண்டும் என்று பில்கேட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேரியா மரணங்கள்
இதனிடையே மலேரியாவினால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளதாக உலக சுகாதார கழகத்தின் மார்க்கரெட் சான் கூறியுள்ளார். ஆனால் இதனை கொண்டாட முடியாது என்று தேசிய தொற்று நோய் தடுப்புத் திட்ட அமைப்பின் (என்விபிடிசிபி) இணை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சோனல் தெரிவித்துள்ளார்.
எலி - பூனை விளையாட்டு
இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் எலி பூனை விளையாட்டு போலத்தான் இருக்கிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் 33 கோடி மக்களில் 7.5 கோடி பேர் மலேரியாவினால் பீடிக்கப்பட்டனர். அதுவே 1964 ஆம் ஆண்டில் 1 லட்சமாக குறைந்தது. ஆனால் 1976 ஆம் ஆண்டு மீண்டும் மலேரியாவினால் 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதுவே 1990 ஆண்டு 20 லட்சமாக குறைந்தது.
எத்தனை பேர் மரணம்
2001 ஆம் ஆண்டில் மலேரியா நோய் தாக்கி 1005 பேர் மரணித்தனர். பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. மலேரியா நோயினால் 2006 ஆம் ஆண்டு மட்டும் 1707 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. புவி வெப்பநிலை மாற்றம், மக்கள் தொகை உயர்வு போன்ற காரணங்களும் அதிக அளவில் மரணங்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக டாக்டர் சோனல் தெரிவித்துள்ளார்.
2014 மலேரியா மரணங்கள்
இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் 2014 வரை மலேரியாவிற்கு 316 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மலேரியா நோய்களை தடுப்பதற்காகவும், மருத்துவசதிக்காகவும் ஆண்டுதோறும் இந்தியாவில் ரூ.6860 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
மலேரியாவிற்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், நோய்களை கண்டறிந்து அதற்கான எதிர்ப்பு மருந்துகளை அதிக அளவில் கொடுப்பதினாலும் மலேரியா நோயினால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மலேரியாவிற்கு எதிரான போர்
1920 மற்றும் 1930களில் இந்தியாவில் பல லட்சம் மக்களை மலேரியா தாக்கியது. இக்காய்ச்சலுக்கு பத்து லட்சம் மக்கள் இறந்தனர். தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் 1958 ல் துவங்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் மலேரியா கட்டுப்படுத்தபட்டது.அதன்பின் அவ்வப்போது மலேரியா காய்ச்சல் வந்தாலும், இறப்புகளின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர் ஆய்வுகள்
மலேரியா கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னமும் அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நன்னீர், தேங்கியுள்ள மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும். சிலநேரங்களில் ஆற்றின் கரையோரங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். அனாபிலிஸ் வகை கொசுக்கள் 58 இருந்தாலும் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பெருகும் கொசுக்கல்
குப்பை கூளங்கள், தேங்கி கிடக்கும் நீர், கழிவுநீர், சாக்கடை போன்ற இடங்களில் வளரும் கொசுக்களே மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்றன. வீடுகளில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைப்பதாலும், சுற்றுப்புறத்தில் நீர் தேங்கி நிற்பதாலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
வடகிழக்கு மாநிலங்களில்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மலேரியா நோய் தாக்குவதற்கான பாதிப்புகள் அதிகம் உள்ளன. கர்நாடகா,சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஒரிசாவிலும் மலேரியா தாக்குதல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.