சமூக வலைதளங்களில் நடிகை குத்து ரம்யா தலைமையில் கலக்கும் காங்கிரஸ் டீம்!
சமூக வலைத்தளங்களில் நடிகை குத்து ரம்யா தலைமையிலான காங்கிரஸ் அணி கலக்கி வருகிறது.
டெல்லி : சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.,விட பின் தங்கி இருந்த காங்கிரஸ் தற்போது கலக்கி வருகிறது. திரைப்பட நடிகை குத்து ரம்யா குழுவிற்கு தலைவராக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் டீம் சுறுசுறுப்படைந்துள்ளதாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார யுக்திகளை தொழிற்நுட்ப வளர்சிக்கேற்ப மாற்றி வருகின்றன. அதற்கு உதாரணம் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வின் செயல்பாடுகள்.
தற்போது அதே டெக்னிக்கை பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறது காங்கிரஸ். கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து இருக்கின்றன.
குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ட்விட் போடும் ஸ்டைல், மொழி, வார்த்தைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது. இதனால் இவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதற்கு பின்னால் இருப்பவர் திரைப்பட நடிகை திவ்யா ஸ்பந்தனா என்கிற "குத்து" ரம்யாதான். குத்து படத்தில் சிம்போடு ஜோடி போட்டவர்தான் ரம்யா.
திவ்யா ஸ்பந்தனா முன்னள் எம்.பி
காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவின் மாண்டியா தொகுதி எம்.பி.,யாக இருந்த திவ்யா ஸ்பந்தனா, தற்போது இந்திய தேசிய காங்கிரஸின் சமூகவலைத்தள குழுவின் தலைவராக இருக்கிறார். கடந்த மே மாதத்தில் இந்த பதவிக்கு வந்த இவரால் காங்கிரஸின் சமூக வலைத்தள கணக்குகள் கையாளப்பட்டு வருகின்றன.
இளைஞர்களுக்கு ஆதரவளிக்கு ராகுல்
காங்கிரஸ் பூர்வீகக் குடும்பத்தில் இருந்து வந்த திவ்யா, திரைப்படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல் பக்கம் வந்தார். முதுபெரும் அரசியல் கட்சியாக இருந்தாலும் இளைஞர்களின் செயல்பாடு தேவை என்பதை அறிந்த ராகுல் காந்தி, அவரை சமூக வலைத்தளபக்கங்கள் நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கினார்.
ராகுலின் ட்விட்டுக்கு பதில்
ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் காங்கிரஸுற்கு அதிகரித்து வரும் ஆதரவால் பா.ஜ.க கொஞ்சம் ஆடிப்போய் இருக்கிறது. ராகுல் எந்த ட்விட் போட்டாலும் அதற்கு வேகமாக பதில் ட்விட் போடுவது பா.ஜ.க.,வின் முக்கியத்தலைவர்கள் தான். அப்போது ராகுலின் ட்விட்டால் ஏகப்பட்ட ஆபத்துகள் இருக்கிறது என்பது உண்மைதானே இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாதது போல் இருக்கிறது பா.ஜ.க
அதிக ஃபாலோயர்ஸ்
ராகுலின் ட்விட்களுக்கு ஸ்மிருதி இரானி, ப்யூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்ற சீனியர் அமைச்சர்கள் பதிலளிப்பதையே தங்களின் கடமையாக வைத்து இருக்கிறார்கள். காரணம் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 17 லட்சம் பேர் ராகுலை ட்விட்டரில் பின் தொடர ஆரம்பித்தது தான். மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறகு அதிக பாலோயர்கள் கொண்ட தலைவர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ராகுல் காந்தி.
முதிர்ந்த அரசியல்வாதி ராகுல்
மாறி வரும் அரசியல் காரணிகள், ஆளும் மத்திய அரசு மீதான விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவை பெற்றுத் தந்துள்ளன. குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தல் செயல்பாடுகள் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு தகுதி உடையவராக ஆக்கி இருக்கும் வேளையில், சமூக வலைத்தளங்களில் பெருகி இருக்கும் ஆதரவும் ராகுல் காந்தியை மக்கள் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக நினைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
ஓட்டாக மாறுமா ?
சமூக வலைத்தள ஆதரவு ஓட்டாக மாறாது என்று சொன்னாலும், அங்கு ஆரம்பித்த ஆதரவு தான் நாடாளுமன்றத்தேர்தலில் மோடிக்கு ஆர்ப்பாட்டமான வெற்றியைப் பெற்றுத்தந்தது. அது ராகுலுக்கு நடக்குமா என்பது இனிதான் தெரியவரும்.