மத்திய பட்ஜெட் எப்படி?: ஃபெயில், சூப்பர், சொதப்பல், யதார்த்தமானது
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட் பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
அதன் விவரம் வருமாறு,
கார்கே
இந்த பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோரின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
உமர் அப்துல்லா
அதிக வேகப்பந்து வீச்சாளர்களை பெற ஒரு திட்டமும் இல்லை. ஃபெயில் பட்ஜெட். கல்லும், மண்ணும் எய்ம்ஸ் மற்றும் ஐஐஎம் ஆகிவிடாது. அவற்றின் தரத்தை தாழ்த்திவிட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்
பட்ஜெட் 2015ல் ஒன்றுமே இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது என்று காங்கிரஸ் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2 மதிப்பெண்
பட்ஜெட்டுக்கு 10க்கு 2 மதிப்பெண்கள் அளித்துள்ளது ஒடிஷாவில் ஆளும் பிஜு ஜனதாதள கட்சி. பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பவார் கட்சி
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பாஜக இன்னும் சிறப்பாக அளித்திருக்கலாம் என்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மோடி
ஏழைகள், நாட்டின் வளர்ச்சி, நடுத்தரவர்க்கம், இளைஞர்களை மனதில் வைத்து பட்ஜெட் தயாரித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
யதார்த்தமான பட்ஜெட்
தற்போதைய சூழலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ள யதார்த்தமான பட்ஜெட். நிதி அமைச்சர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இது வெறும் துவக்கம் தான். இனி பல நல்லவைகள் நிதி அமைச்சரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐஐஎம் பெங்களூரில் பணியாற்றும் பேராசிரியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.