துணை ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்?
நாட்டின் துணை ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார், அந்த தேர்தலில் யாருக்கெல்லாம் வாக்களிக்க உரிமை உண்டு உள்ளிட்டவற்றை பார்ப்போம்.
டெல்லி: இந்தியாவின் துணை ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளநிலையில் அப்பதவிக்கு வரும் 5-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் மோதுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் போன்று...
ஜனாதிபதி தேர்தல் போன்று துணை ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படுகிறது. துணை ஜனாதிபதியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இரு தேர்தல்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.
என்ன வித்தியாசம்
துணை ஜனாதிபதி தேர்தலில் மாநில சட்டசபை உறுப்பினர்களுக்கு ஓட்டு போட உரிமை கிடையாது. ராஜ்ய சபாவில் 233 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், 12 நியமன உறுப்பினர்களும், லோக் சபாவில் இருந்து 543 உறுப்பினர்களும், 2 நியமன உறுப்பினர்களும் வாக்களிக்க உரிமை பெற்றவர்களாவர்.
வாக்கு மதிப்பு எவ்வளவு
இரு அவைகளையும் சேர்த்து மொத்த வாக்காளர்கள் 790 உறுப்பினர்களாவர். அவர்கள் அளிக்கும் வாக்கானது பொதுமக்கள் அளிக்கும் வாக்கை கருதுவது போல் ஒத்த மதிப்புடையதாகவே கருதப்படும். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். எந்த கட்சியின் சின்னமும் இடம்பெறாது.
இரு பிரிவுகள்
அந்த வாக்குச் சீட்டில் இரு பகுதிகள் இருக்கும். அதில் ஒரு பகுதியில் வேட்பாளர்களின் பெயர்களும், மற்றொரு பகுதியில் யாரை தேர்வு செய்ய விருப்பமோ அவர்களை வரிசைப்படுத்தி எண்களை குறிப்பிட வேண்டும். மொத்தம் வாக்காளர்களில் 50 சதவீத வாக்குகளை பெறுவோரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
தகுதிகள்
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதியானவராக இருக்க வேண்டும். லாபம் தரும் அரசு பதவிகளை வகிக்கக் கூடாது.