ஹிந்தி, ஆங்கிலத்துக்கு கட்-அவுட்டு.. தமிழுக்கு கெட்அவுட்டா? அம்பலப்பட்ட சிபிஎஸ்இயின் மெத்தனம்
டெல்லி: சிபிஎஸ்இ அமைப்பு என்பது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டுமே சிறப்பிக்கும் அமைப்பாக இருப்பதும் மற்ற இந்திய மொழிகளை அது ஒரு பொருட்டாக கருதாததுமே, நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வின் போது தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகள் தவறான மொழிபெயர்ப்புடன் இருந்தது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியான ரங்கராஜனின் வழக்கு ஆகும். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தனது தீர்ப்பை வழங்கியது.
அதில் சிபிஎஸ்இ அமைப்பு தவறுதலாக மொழியாக்கம் செய்துள்ளது சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மொத்தம் 196 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்களாக வழங்குவதற்கு உத்தரவிட்டனர்.
மருத்துவ கலந்தாய்வை மீண்டும் நடத்துமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுத்தை என்று கேள்வி கேட்பதற்கு பதிலாக சீதா என்று குறிப்பிட்டுள்ளது சிபிஎஸ்இ. இதேபோல வவ்வால் என்றும் வாவல் என குறிப்பிட்டுள்ளது.
அவுட்சோர்சிங் முறையில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதாக ரங்கராஜன் குற்றஞ்சாட்டியிருந்தார். அதை நிரூபிப்பது போல இருந்தது நீட் தேர்வு. டெல்லியை தலைமையிடமாக கொண்ட அமைப்பான சிபிஎஸ்இ, ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஹிந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்ற நினைப்பில் இருப்பதையுமே இந்த வினாத்தாள் தயாரிப்பு பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது.
இந்திய அட்டவணை மொழிகளில் ஒன்றான தமிழுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற மொழிகளை சிபிஎஸ்இ அமைப்பு எந்த அளவுக்கு துச்சமென மதிக்கும் என்ற கேள்வி கல்வியாளர்களிடம் எழுகிறது. ஒவ்வொரு பிராந்திய மக்களுக்கும் தங்கள் மொழி சார்ந்த கலாசாரம், பிடிப்பு இருக்கும் என்ற அக்கறையும், நினைப்பும் சிபிஎஸ்இ அமைப்புக்கு இல்லை என்பதையே நீட் தேர்வு எடுத்து காட்டுகிறது.