ஜெ- சசி குவித்த சொத்து.. குமாரசாமி கணக்கு 8%; சுப்ரீம்கோர்ட் கணக்கு 211%
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவித்துள்ளனர். இது ஒன்றே அவர்களுக்கு தண்டனை வழங்க போதுமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: ஜெயலலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளனர் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் சில அம்சங்கள்:
கர்நாடகா உயர்நீதிமன்றம் சொத்துகளை தவறாக மதிப்பீடு செய்துள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கணக்குப்படி பார்த்தாலே வருமானத்துக்கு அதிகமாக குவித்த சொத்து மதிப்பு என்பது ரூ.14,38,93,645. இது மொத்தம் 41.3% ஆகும்.
8.12% அல்ல
கர்நாடகா உயர்நீதிமன்றம் குறிப்பிடுவதைப் போல ரூ 2,82,36,36,812 கோடிதான் வருமானத்துக்கு அதிகமான சொத்து என்பது தவறு. அதாவது 8.12% மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டது என்பது தவறு.
திருமண செலவு
சுதாகரன் திருமண செலவு ரூ 6,45,04,222 என அரசுத் தரப்பு வாதிட்டது. ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமோ இதை வெறும் ரூ28,68,000 என குறைத்து மதிப்பிட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் சுதாகரன் திருமண செலவு ரூ3 கோடி என மதிப்பிட்டுள்ளது.
கடன் கூட்டலில் பிழை
கடன்கள் தொடர்பான கூட்டுத் தொகை என்பது ரூ.10.67 கோடிதான். ஆனால் கடன்களின் கூட்டுத் தொகையை ரூ 24,17,31,274 என பிழையாகப் போட்டு இதை ஜெயலலிதாவின் வருவாய் கணக்கில் வைத்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இந்த பிழையை சரிசெய்து கடன்களை வருவாய் கணக்கில் சேர்க்காவிட்டால் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து மதிப்பு ரூ16,32,36,812 கோடி. அதாவது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு என்பது 76.7% ஆகும்.
211% சொத்து குவிப்பு
கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பில் அனைத்துப் கணக்குப் பிழைகளை சரி செய்தால்
வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு என்பது ரூ 35,73,04,006.
மொத்த வருவாய் என்பது ரூ16,92,60,503 மட்டுமே.
வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பான ரூ 35,73,04,006 ஐ 100 ஆல் பெருக்கி வருவாய் ரூ16,92,60,503 ஆல் வகுத்தால்
வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் 211% சொத்து குவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றே மூவருக்கும் தண்டனை விதிக்க போதுமானதாகும்.