எத்தனை காலத்திற்குத்தான் முதல்வர்களின் நினைவில்லங்களாக மாற்றுவீர்கள்?கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்
இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முதலமைச்சர்களுக்கு நினைவில்லங்களை அமைப்பீர்கள், எல்லா முதல்வர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்கிப் பராமரிக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் இல்லங்கள் நினைவில்லங்களாகப் பராமரிக்கப்படுவதாகவும் இது புதிதல்ல என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி முதல்வர்களின் இல்லங்களை நினைவில்லங்களாக மாற்றுவீர்கள்? எல்லா முதலமைச்சர்களின் இல்லங்களையும் நினைவில்லங்களாக மாற்ற முடியுமா?" என்றும் கேள்வி எழுப்பினர். இப்படியே சென்றால் அமைச்சர்களின் இல்லங்களும் நினைவில்லங்களாகுமா என்றும் கேட்டனர்.
நீதித் துறைக்கு பல நீதிபதிகள் பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். அவர்களது நினைவாக சிலை வைத்தால், நீதிமன்றத்தில் இடமிருக்குமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அரசுத் தரப்பை பதில் மனு தாக்கல் செய்யும்படி கூறிய உயர்நீதிமன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: இந்தியாவிற்கு ஆதரவாக விராட், சச்சின் ட்விட்டரில் பதிவு – டிரண்டாகும் ஹாஷ்டேக்
- தேர்தல் 2021: கருப்பு' எம்.ஜி.ஆர் முதல் பெரியப்பா' எம்.ஜி.ஆர் வரை - காரணம் சொல்லும் திமுக; கடுகடுக்கும் அதிமுக
- நாளை இலங்கை சுதந்திர தினம் - தமிழில் தேசிய கீதத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?
- தேர்தல் 2021: கூட்டணியில் பாமக, தேமுதிக - அதிமுக மிரட்டுகிறதா, மிரள்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: