திரிபுராவில் வென்றது பாஜகவின் "டிரிக்"... மாணிக் சர்க்கார் வீழ்த்தப்பட்டது இப்படித்தான்!
Recommended Video
அகர்தலா: 3 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் அதிக அதிர்ச்சியைக் கொடுத்திருப்பது திரிபுரா முடிவுகள்தான். யாரும் எதிர்பாரத வகையில் மாணிக் சர்க்காரின் ஆட்சியை பாஜக வீழ்த்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக மிக எளிமையான முதல்வர் என்ற பெருமையுடன் வலம் வந்தவர் சர்க்கார். 25 வருட காலம் அங்கு அசைக்க முடியாத முதல்வராக இருந்தவர். இன்று அவர் வீழ்த்தப்பட்டிருப்பது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான்.
ஆனால் இடதுசாரிகளின் கோட்டையில் காணப்பட்ட ஓட்டைகளை படு சாதுரியமாக அடையாளம் கண்டு புகுந்து புறப்பட்டு கோட்டையை தகர்த்துள்ளது பாஜக. இங்கு பாஜகவின் தந்திரமான செயல்பாடுகளே வென்றுள்ளன.
எளிமையை வீழ்த்திய வலிமை
இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக செயல்பட்டது பாஜக. பிரசாரத்தில் மோடி முன்னிறுத்தப்பட்டார். எங்கு பார்த்தாலும் மோடி படம்தான். மோடியே இங்கு வந்து தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். வாக்காளர்கள் "சிறந்த" முறையில் கவனிக்கப்பட்டதாகவும் புகார்கள் உண்டு. மறுபக்கம் வழக்கம் போல எளிமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது இடதுசாரி கூட்டணி.
திட்டமிட்டு செயல்பட்ட பாஜக
பாஜக இந்தத் தேர்தலில் மிகவும் திட்டமிட்டு இடதுசாரிகளைக் குறி வைத்தது. தனக்கென்று திரிபுராவில் பலம் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த பாஜக அதற்கேற்ப காய்களை நகர்த்தியது.
அடிப்படையே இல்லாத பாஜக
தன்னிடம் இல்லாத பலத்தை சேர்ப்பதற்காக மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட பாஜக அதற்காக குறி வைத்தது காங்கிரஸ் மற்றும் தனக்கு எதிரான வாக்கு வங்கிகளைத்தான். அதை சிதைத்து சிதறடித்து தனக்கென புது பலத்தை உருவாக்கிக் கொண்டு தேர்தலைச் சந்தித்தது.
சிதைந்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுதிப் ராய் பர்மன் இதில் முக்கியமானவர். இவரை தன் பக்கம் இழுத்த பாஜக அவர் மூலமாக கணிசமான வாக்கு வங்கியையும் தன் பக்கம் கொண்டு வந்தது.
சூறாவளியாக சுழன்ற பிப்லப்
மறுபக்கம் மாநில பாஜக தலைவர் பிப்லப் தேவ் சூறாவளியாக சுழன்று பாஜகவை பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டினார். அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது.
பழங்குடியினர் வாக்குகள் அபேஸ்
மறுபக்கம் பழங்குடியினரின் வாக்குகளை அழகாக வாரிச் சுருட்டியது பாஜகவின் கேம் பிளான் ஆகும். வழக்கமாக இவை கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் கட்சிக்குப் போகக் கூடியவை அதை மிக அழகாக தன் பக்கம் திருப்பியது பாஜக. அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமா என்பது விவாதத்துக்குரியது.
கம்யூனிஸ்டுகள் சுதாரிக்கவில்லை
ஒரு பக்கம் இப்படி பாஜகவினர் ஆர்ப்பாட்டமாக போய்க் கொண்டிருந்த நிலையில் வழக்கம் போல கம்யூனிஸ்டுகள் தங்களது ஆட்சி மீதும், ஆட்சியின் திட்டங்கள் மீதும், கொள்கை மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்து நிதானமாக போய்க் கொண்டிருந்தனர். சுதாரிக்கவில்லை. கம்யூனிஸ்டுகளின் போஸ்டர்களில் ஒரு போஸ்டரில் கூட முதல்வர் மாணிக் சர்க்காரின் படம் கிடையாது என்பதிலிருந்தே அவர்கள் எத்தனை எளிமையானர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கோட்டை விட முக்கியக் காரணம்
அதீத நம்பிக்கையால்தான் திரிபுராவை கம்யூனிஸ்டுகள் இழந்துள்ளனரா என்ற கேள்வியையும் புறம் தள்ளி விட முடியவில்லை. பல காரணங்கள் இருந்தாலும், மாணிக் சர்க்கார் போன்ற சிறப்பான முதல்வரை, செயல்பாட்டாளரை இழந்திருப்பது திரிபுராவுக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.