ரூ.1.4 கோடி போலி வைரத்தால் பிரேக்-அப் ஆன காதல்.. தொழிலதிபர் வாழ்க்கையில் விளையாடிய நீரவ் மோடி!
நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற தொழிலதிபர் 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது காதல் முறிந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
எல்லாம் பொய்
ஏற்கனவே நீரவ் மோடிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தில் விற்கப்பட்ட நகைகளில் பல போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நிறைய வைர நகைகளில் கலப்படம் செய்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த புகார் வந்த சில நாட்களிலேயே, முக்கியமான கஷ்டமர்களை நீரவ் மோடியின் கீதாஞ்சலி நிறுவனம் இழந்துவிட்டது.
வைரம் வாங்கினார்
இந்த நிலையில் கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா, கடந்த 2013ல் நீரவ் மோடியிடம் வைரம் வாங்கியுள்ளார். இந்த வைரத்தின் மதிப்பு 1.4 கோடி ரூபாய். ''3.2 கேரட் ரவுண்ட் பிரில்லியண்ட் டயமண்ட் கட், டி கலர், விவிஎஸ்1'' ரக மிக உயர்ந்து மதிப்பு கொண்ட வைரம் ஆகும் இது. தன்னுடைய காதலிக்கு பரிசாக இதை அளித்துள்ளார்.
சந்தேகம் வந்தது
இந்த நிலையில் தனது காதலியுடனான நிச்சயத்தின் போது, இந்த 1.4 கோடி ரூபாய் மோதிரத்தை அல்போன்சா தன்னுடைய காதலிக்கு அணிவித்துள்ளார். ஆனால் சென்ற வருடம் இந்த வைரம் மீது இருவருக்கும் சந்தேகம் வந்துள்ளது. கொஞ்சம் நிறமும் மங்கியதன் காரணத்தால் சந்தேகம் வந்துள்ளது.
வைரம் போலி
இதையடுத்து இந்த வைரத்தை சோதனை செய்து இருக்கிறார்கள். அதன்பின்பே அந்த வைரம் போலி என்று தெரிந்துள்ளது. இதை அவர்களால் நம்ப முடியவில்லை. அதற்குள் சில நாட்களில் நீரவ் மோடி தலைமறைவாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிந்தனர்
இந்த வைரத்தை வாங்கி ஏமாந்ததன் காரணத்தால் அல்போன்சாவிற்கும் அவரது காதலிக்கும் சண்டை வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக சில நாட்களிலேயே இவர்கள் பிரிந்துவிட்டதாக அல்போன்சா தெரிவித்துள்ளார். இதை குறித்து கனடா பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து புலம்பி உள்ளார்.