லாலுவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை அதிரடியால் புஸ்வானமாக்கிய நிதிஷ்!
தமது ஆட்சியை கவிழ்க்க நினைத்த லாலுவின் சதியை அதிரடியாக முறியடித்துள்ளார் நிதிஷ்குமார்.
பாட்னா: தமது ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய லாலுவுக்கு ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சரியான பதிலடியை தந்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சி இணைந்து மெகா கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 17 ஆண்டுகாலம் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் அதில் இருந்து விலகி இந்த கூட்டணியை உருவாக்கியது.
பாஜகவிடம் லாலு சரண்
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத், அவரது மகள் மிசா பாரதி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதனால் அதிர்ந்து போன லாலு தரப்பு பாஜகவிடம் சரணடைய தொடங்கியது.
நிதிஷ் அரசை கவிழ்க்க சதி
இந்த வழக்குகளில் இருந்து நீங்கள் எங்களை காப்பாற்றினால் நிதிஷ்குமார் அரசை நிச்சயம் நாங்கள் கவிழ்க்கிறோம் என டெல்லிக்கு உறுதி அளித்தது லாலு தரப்பு. ஆனால் லாலுவின் இந்த சதித் திட்டத்தை மோப்பம் பிடித்துவிட்டார் நிதிஷ்குமார்.
சதி முறியடிப்பு
இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அறிவித்த உடனேயே ஆதரவையும் தெரிவித்துவிட்டார் நிதிஷ்குமார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தமது அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் பாஜக உதவிக்கு வரும் எனவும் நம்புகிறார் நிதிஷ்குமார்.
பாஜகவுக்கு சிக்னல்
பாஜகவுக்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடர்பாளர் கேவி தியாகி, 17 ஆண்டுகாலம் பாஜகவுடன் எந்த பிரச்சனையுமே இல்லாமல்தான் கூட்டணியில் இருந்தோம். வாஜ்பாய் தலைமையிலான அரசிலும் பங்கேற்று இருந்தோம். இப்போதும் பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் ராமர் கோவில் விவகாரம், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் சித்தாந்த ரீதியாக வேறுபாடு இருக்கவே செய்கிறது என சுட்டிக்காட்டினார். இந்த பேட்டியானது லாலு போனால் பாஜக ஆதரவு தரும் என்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.