சீனாவுடனான எல்லை பிரச்சனை... எரியும் நெருப்பில் எண்ணெயை தொடர்ந்து ஊற்றும் பாகிஸ்தான்!
சீனாவுடனான எல்லைப் பிரச்சனையை பாகிஸ்தான் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குவதாகவும், பொய்ப் பிரசாரம் செய்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: சீனாவுடன் நீடிக்கும் எல்லை பிரச்சனையை பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் பெரிதாக்கி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி அணையாமல் பார்த்துக்கொள்கின்றன என்று கொந்தளிக்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.
சீனாவுடனான எல்லை பிரச்சனையை தீர்த்துக்கொள்ள அரசியல் ரீதியாக தீர்வுகாண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தகவல்கள் அளித்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள், "எல்லைப் பிரச்சனை முடியக்கூடாது என்று பாகிஸ்தான் நினைக்கிறது. அதற்காக பாகிஸ்தான் ஊடகங்களை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்திக்கொள்கிறது. மேலும் இந்தச் சதிச் செயலில் ஐஎஸ் தீவிரவாதிகளும் சேர்ந்து செயல்படுவதாகவும் தெரிகிறது.
துன்யா டிவியில், டோக்லாம் பகுதியில் 158 இந்திய வீரர்களை சீனா ராணுவ தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதே போல டான் டிவியிலும் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள், போலி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது முற்றிலும் போலியானவை என்றும், உண்மையில் டோக்லாம் களநிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படியாவது இந்தியாவையும், சீனாவையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கவேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது.
இது மட்டுமில்லாமல், ஏவுகணைகளை இந்திய எல்லையில் சீனா நிறுத்தியுள்ளதாகவும் செய்திகள், படங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதுவும் பாகிஸ்தான் ராணுவம் போலியாக தயாரித்த செய்தி என்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கு அவர்களும் இவை போலியான செய்திகள்தான் என்று உறுதிப்படுத்தியதாகவும் தெரிகிறது." என்று கூறினர்.