ராம்நாத் கோவிந்த் வேட்பாளரானது எப்படி.. பாஜகவின் பரபர பின்னணி தகவல்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் பெயர் அறிவிக்கப்பட்ட கடைசி நிமிடம் வரை, ரகசியம் காப்பாற்றப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய
டெல்லி: புதிய ஜனாதிபதி யார் என பல்வேறு யூகங்கள் இருந்து வந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் பெயரை பாஜக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
பாஜக மேலிடம் அமைத்த மூவர் குழுவினர், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அண்மையில் கேட்டறிந்தனர்.
அத்வானி, முரளி மனோகர்ஜோஷி, ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு மற்றும் மூத்த மத்திய அமைச்சர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கலாம் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிந்துரைத்தனர்.
சிவசேனா ஆலோசனை
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் பெயரை சிவசேனா வலியுறுத்தியது. மத்திய அமைச்சர் ஒருவரை ஜனாதிபதியாக்கலாம் என்ற கருத்தை பிரதமர் மோடி ஏற்கவில்லை.
தலித் வேட்பாளர் மோடி சாய்ஸ்
மேலும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். தலித் அல்லது பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும். பாஜக தொண்டராக இருந்திருக்க வேண்டும். கற்றறிந்தவராகவும், அரசியல்வாதியாகவும், சர்ச்சைகளில் சிக்காதவராகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்க்கட்சிகள் வலுவிழக்கும்
தலித் வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில், வேறொரு பெயரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்வது கடினம் என்றும், அப்படியே பரிசீலித்தாலும் கட்சிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பாஜக வேட்பாளருக்கு சாதகமான நிலை உருவாகும் என பிரதமர் கருதியதாகவும் கூறப்படுகிறது.
அமித்ஷா காப்பாற்றிய ரகசியம்
எனவேதான், ராம்நாத் கோவிந்த் பெயரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரம் கடைசி வரை அமித்ஷாவைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தர்மசங்கடம் வந்துவிடக் கூடாது
அதே நேரத்தில், ஜனாதிபதி வேட்பாளர் பெயரை மீடியாக்கள் மூலம் அறிவித்து அதனால் தலைவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடாது என்று கருதியுள்ளது பாஜக. இதற்காக ரகசியம் கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்ததாம்
மோடி போனின் பின்னணி
அதனால் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் முன்கூட்டியே தொலைபேசி வாயிலாக அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.