சச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா? ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வந்த அரசியல் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கலகக் குரல் எழுப்பிய முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், காங்கிரஸ் தலைமையுடன் 'கை'குலுக்கி உள்ளார்.
இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணி என்ன? வெற்றிகரமாக இந்த ஆபரேஷனை நடத்திக் காட்டியது யார்? என்பது ராஜஸ்தான் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்குமே புரியாத புதிராக இருக்கிறது.
இத்தனைக்கும் ராஜஸ்தானில் நடந்தது பெரிய அரசியல் பிரளயம்.. அந்த பிரளயத்தால்தான், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சச்சின் பைலட் பதவி பறிக்கப்பட்டது.. துணை முதல்வர் பதவியும் சேர்ந்தே பறிபோனது.
நம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்!!
கலகம்
முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் இணைந்து கலகத்தை ஆரம்பித்தார் சச்சின் பைலட். ஆனால் அசரவில்லை அசோக் கெலாட். அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவையோ அத்தனை பேரையும் தனது பாக்கெட்டில் தயார் செய்து வைத்துக் கொண்டார். ரிசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்க வைத்துக் கொண்டதோடு சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களை கூட தன் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஓரளவு வெற்றி பெற்றார்.
அசோக் அபாரம்
காலரைத் தூக்கி விட்டபடி "உடனே சட்டசபைக் கூட்டுங்கள்.. நான் பெருமான்மையை நிரூபித்து காட்டுகிறேன்" என்று ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தார் முதல்வர். கடும் நெருக்கடிக்கு பிறகு ஆளுநர் சட்டசபையை கூட்ட அனுமதி வழங்கியுள்ளார். வரும் 14ஆம் தேதி ராஜஸ்தான் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது. அதில் அசோக் கெலாட் பெரும்பான்மை நிரூபித்து விட்டால், பிறகு 6 மாத காலத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு சட்டத்தில் வழிமுறை கிடையாது. எனவே, குறைந்தபட்சம் 6 மாத காலம் அரசுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. இப்போதுள்ள சூழ்நிலையில் அசோக் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. எனவே, இதற்கு மேலும் கலகம் செய்தால் ஆறு மாதத்திற்கு அரசியல் துறவறம் மேற்கொள்வதை தவிர சச்சின் பைலட்டுக்கு வேறு வழியில்லை. அதற்குள்ளாக இருக்கும் மிச்ச, சொச்ச எம்எல்ஏக்களும் அந்த பக்கம் போனால், சச்சின் பைலட் கதி அதோ கதிதான். இதை அவரும் நன்கு உணர்ந்து விட்டார்.
ஆட்சி போனதுதான் மிச்சம்
மற்றொரு பக்கம், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பூசலால் ஆட்சி கலைந்து, பாஜக ஆட்சிக்கு வந்ததுதான் மிச்சம். ஒரு பலனும் இல்லை. மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைந்து போனது. ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்யா இருவருமே ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். இளம் தலைவர்களை வளர்த்து விடும் ராகுல்காந்தியின் வியூகம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பியதற்கு இவ்விரு தலைவர்களும் நல்ல உதாரணம். எனவேதான் தர்மசங்கடத்தில் சிக்கியிருந்தார் ராகுல்காந்தி.
இதயம் கனிந்தது
அதேநேரம், திரைமறைவில் பிரியங்கா காந்தி களத்தில் இறங்கினார். சச்சின் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் செவிசாய்க்கவில்லை சச்சின். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டதை அறிந்த சச்சின் பைலட், பிரியங்கா காந்தியையும், ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்தார். கிட்டத்தட்ட, "இதயம் கனிந்தது.. கண்கள் பனித்தது" என்று மட்டும்தான் சொல்லவில்லை. மற்றபடி, தனது பேட்டியில் காங்கிரஸ் கட்சிக்காக உருகினார் சச்சின். இப்போது எல்லாம் சுபம்!
யாருடைய வெற்றி
ஆனால் சச்சின் பைலட் தரப்பிலிருந்து சில எம்எல்ஏக்கள் அசோக் கெலாடிடம் செல்ல விரும்பியதும், அசோக் தரப்பு வலுவாக இருப்பதும் தான் சச்சின் பைலட் மனமாற்றத்திற்கு காரணமே தவிர, காங்கிரஸ் மீதான பாசம் கிடையாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனவேதான் தைரியமாக முன்வந்து ராஜஸ்தான் பிரச்சனையை தீர்த்து வைத்தது நான்தான் என்று ராகுல் காந்தியோ பிரியங்கா காந்தியோ அல்லது சோனியா காந்தியோ தெரிவிக்கவில்லை .அல்லது அவரது ஆதரவாளர்கள் கூட மறைமுகமாக அப்படி ஒரு வாதத்தை முன்வைக்கவில்லை.
கையறு நிலையில் பைலட்
ஏனெனில் சச்சின் பைலட் நேரம் பார்த்து காத்திருக்கிறார். உள்ளே எரிமலை எப்போது வேண்டுமானாலும் பொங்கும். எனவே, சச்சினை மனமாற்றம் செய்துவிட்டதாக அறிவிப்பது அர்த்தமற்ற பேச்சு என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே கிரெடிட் எடுத்துக் கொள்வதற்கு எல்லோருக்கும் தயக்கமாக இருக்கிறது. கையறுநிலையில் சச்சின் பைலட் இருப்பதுதான் காங்கிரசுடன் அவர் இணக்கமாக போக காரணம். இதை வெளியே சொல்ல முடியாது, ஆனால் கிரெடிட்டும் எடுக்க முடியாது. எனவேதான் யாரும் இதனை சாதனை என்று மார்தட்டிக்கொள்ளவில்லை.
அப்படியே அமைதியாக கடந்து செல்கிறார்கள்.
உரிமையில்லை
இந்த நிலையை நிரந்தரமாக சரிசெய்ய முடியுமா என்றால் முடியும். சச்சின் பைலட் போன்றவர்களுக்கு காங்கிரஸ் மீதான அதிருப்தி முழுமையாக போகும் அளவுக்கு பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும். அப்படி யார் செய்கிறார்களோ அவர்கள் வருங்காலத்தில் தாங்கள்தான் காங்கிரஸின் சாரதி என்ற அந்தஸ்தை நெஞ்சில் பேட்ஜ் போல குத்திக் கொள்ளலாம். ஆனால் இப்போது சச்சின் மனமாற்றத்திற்கு யாரும் சாதனை கோரி உரிமை கொண்டாடி விட முடியாது.
எல்லா புகழும் வசுந்தராவுக்கே
"ஒருவேளை, அப்படி உரிமை கொண்டாடினால், அந்த கிரெடிட் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்குத்தான் போக வேண்டும். இத்தனை களேபரத்திற்கு இடையேயும், சச்சின் பைலட் பாஜக பக்கம் வந்துவிட கூடாது என்று லாபி செய்தது அவர்தானே. எனவே சச்சின் வேறு வழியில்லாமல் காங்கிரசில் தொடர வசுந்தரா ராஜேவுக்குத்தான் சோனியா நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று கண்சிமிட்டி சிரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆம்.. அசோக் கெலாட்டின் அரசியல் எதிர்காலத்தைவிட, சச்சின் பைலட்டின் பாஜக வருகை வசுந்தரா ராஜேவின் அரசியல் எதிர்காலத்திற்குத்தான் வேட்டு வைத்திருக்கும். இப்போது காங்கிரசை போலவே, பாஜக மாநில தலைமையும் நிம்மதியடைந்துள்ளது என்பதே நிதர்சனம்.