டீச்சர் கொலை, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குற்றவாளியை கவ்வி பிடித்த காவல்துறை டெக்னாலஜி!
பெங்களூர்: டெக்னாலஜியை பயன்படுத்தி குற்றம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை அதே டெக்னாலஜியை பயன்படுத்தி கைது செய்து புத்திசாலித்தனத்தில், குற்றவாளியை முந்தியுள்ளது பெங்களூரு போலீஸ்.
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி கொலை
போலீசாரிடம் கோகுல் அளித்த வாக்குமூலத்தின்போது, தனது மனைவியை கொலை செய்துவிட்டு விபத்து என்று நாடகமாடிய தகவலும் அம்பலமாகிவிட்டது. திருச்சூரில் பள்ளி, கல்லூரி படித்த காலகட்டத்தில் கோகுலுக்கும், கரோலின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கரோலின் மேற்படிப்புக்காக திருச்சிக்கும், கோகுல் டெல்லிக்கும் சென்றதால் இருவருக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
இந்நிலையில், டெல்லியில் பழக்கமான அனுராதா என்ற பெண்ணை திருமணம் செய்து பணிக்காக பெங்களூர் வந்தார் கோகுல். இத்தம்பதிக்கு 1 மகள் உள்ள நிலையில், அனுராதா வேலைபார்த்த கல்வி நிறுவனத்தில் படித்த மாணவனோடு கள்ளக்காதலுக்கு ஆட்பட்டார். இதை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டார் கோகுல்.
வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில்தான், கோகுலுக்கு, கரோலின் தொடர்பு பேஸ்புக் மூலம் மீண்டும் கிடைத்துள்ளது. கரோலினுக்கு சாஜு ஜோஸ் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பதையும் அறிந்துகொண்டார். இதையடுத்து அனுராதாவை கொலை செய்துவிட்டு, சாஜு ஜோசை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் சிறைக்கு அனுப்பிவிட்டு கரோலினை அடைய திட்டமிட்டார் கோகுல்.
சிக்கிய கோகுல்
இதன்படி ஜூலை 27ம் தேதி அனுராதாவை தலையில் அடித்துக்கொன்ற, கோகுல், கடந்த சனிக்கிழமை, டெல்லி மற்றும் பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு, சாஜு ஜோஸ் பெயரில் வாங்கிய சிம்கார்டு போட்ட செல்போனில் இருந்து மிரட்டல் அழைப்புவிடுத்தார். இருப்பினும் போலீஸ் விசாரணையில் கோகுல் சிக்கினார்.
போலீஸ் ஆக்ஷன்
கோகுல் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து, விசாரணை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் உடனடியாக டிரேஸ் செய்தனர். அது பெங்களூரை சேர்ந்த ஏர்டெல் நம்பர் என்பது உறுதி செய்யப்பட்டது.
நம்பர் டிரேஸ்
இதையடுத்து அந்த நம்பர் எந்த ஏரியாவில் தற்போது உள்ளது என்பதை காவல்துறை கண்காணித்தது. அது பெங்களூர் எச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதியில், செயல்பாட்டில் உள்ளது என்பது அப்போது உறுதியானது. அதேநேரம், கிரிமினல் எப்படி சிம்கார்டை செயல் இழக்க வைக்காமல் உள்ளார் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. போலீசார் சாஜு ஜோசை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கோகுல்தான் வேண்டுமென்றே சிம்கார்டை செயலிழக்க செய்யாமல் இருந்துள்ளார்.
போலீஸ் தேடுதல்
இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட அப்பார்ட்மென்டுக்கு சென்று சாஜு ஜோசிடம் விசாரித்தனர். அவர் தான் எதுவும் மிரட்டல்விடுக்கவில்லை என்று தெரிவித்தார். அவர் வீட்டில் தேடியபோது, குறிப்பிட்ட சிம் கிடைக்கவில்லை. இருப்பினும் செல்போன் நெட்வொர்க் அதே அப்பார்ட்மென்டை சுட்டிக்காட்டியதை போலீசார் டிரேஸ் செய்து கொண்டிருந்ததால் சந்தேகத்தின் பேரில் சாஜு ஜோஸ் மற்றும் அவரது மனைவி கரோலினை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தனது காரிலேயே
அப்போது கோகுல் நல்லவரை போல வந்து, சாஜு ஜோஸ் மற்றும் கரோலினை தனது காரில் ஏற்று காவல் நிலையம் அழைத்து வந்தார். அப்போதுதான் ஒரு விஷயத்தை செல்போன் சிம்மை கண்காணித்த போலீசார் கவனித்தனர். அது என்னவென்றார், கார் பயணித்த பாதையெங்கும் சிம் கார்டின் லொகேஷனும் டிரேஸ் ஆகிக்கொண்டிருந்தது.
பாதி வழியில் சிக்கினார்
இதுகுறித்த தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்ததும் நடு வழியில் காரை நிறுத்த சொன்ன போலீசார், காரை முற்றாக சோதித்தனர். அப்போது, கார் மேட்டுக்கு கீழே மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கிடந்தது. இதனால் கோகுல் மீது சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவரையும் பிடித்து விசாரித்தபோது, உண்மைகள் பொலபொலவென கொட்டிவிட்டன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
தடயம் சிக்கும்
என்னதான் குற்றவாளி தப்பு செய்தாலும், ஏதாவது ஒரு ஆதாரத்தை தவறவிட்டே தீருவான் என்ற பிரபல வாக்கியத்தை கோகுல் நிஜப்படுத்திவிட்டார். மேலும், டெக்னாலஜி மூலம் கோகுல் செய்த தப்பை, டெக்னாலஜி மூலமே காவல்துறை முறியடித்துவிட்டது. விமான மிரட்டல் மட்டுமின்றி கொலை வழக்குக்காகவும் தற்போது கம்பி எண்ணுகிறார் கோகுல்.