தாலிபான்கள் மீது அமெரிக்காவுக்கு ஏன் இந்த அக்கறை? உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை?
டெல்லி: தாலிபான்களை பார்த்து ஆயுதம் ஏந்திய போராளிகள் என்று மென்மையாக அமெரிக்கா பேசியதை பார்த்து பிற உலக நாடுகளுக்கு வேண்டுமானால் ஷாக் ஆகியிருக்கலாம், ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் அசரவில்லை. காரணம், அமெரிக்காவின் வியூகத்தை பற்றி இந்திய உளவு அமைப்பினர் கையில் புள்ளி விவரத்தை வைத்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் எரிக சூல்ட்ஸ் அளித்த பேட்டியில்தான், தாலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்யாத குறையாக வாய் மலர்ந்தார். இதன் பின்னணி விஷயம் இதுதான்:
இருவேறு தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருவேறு தாலிபான்கள் ஆதிக்கம் உள்ளது. ஒன்று முல்லா உமர் தலைமையிலான தாலிபான்கள். இவர்கள் பாகிஸ்தானையும், அதன் நட்பு நாடுகளையும் மட்டும் தாக்க மாட்டார்கள். எனவே பாகிஸ்தானால், நல்ல தானிபான்கள் என்று புகழப்படுபவர்கள். மற்றொரு தாலிபான்கள் தெரிக் இ தாலிபான்கள். இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து கொண்டு செயல்படுபவர்கள்.
பெஷாவர் தாக்குதல்காரர்கள்
பெஷாவரில் பள்ளி குழந்தைகளை கொலை செய்தது தெரிக் தாலிபான்கள்தான். எனவே, தெரிக் தாலிபான்களை இந்திய உளவு அமைப்பான ரா கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அவ்வப்போது கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும்.
பாதுகாப்பு கேடயம்
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது முல்லா உமர் தலைமையிலான தாலிபான்கள் என்ற தகவல் பலருக்கும் புதிதாகவே இருக்கும். ஆனால் அது உண்மை என்கின்றனர் இந்திய உளவு துறை அதிகாரிகள். இதற்காக தாலிபான்களுக்கு அமெரிக்கா ஏகப்பட்ட பணத்தை கொட்டிக் கொடுக்கிறதாம்.
பண பரிமாற்றம்
ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தான் மண்டலத்தில் ஏற்படவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்காக சிஐஏ அமைப்பின் முந்னாள் அதிகாரி ஒருவரையும் ஆப்கனில் பணியமர்த்தியுள்ள அமெரிக்கா அவர் மூலமாக தாலிபான்களுக்கு பணம் சப்ளை செய்கிறதாம்.
அமெரிக்கா வக்காலத்து
இந்த நிதி அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இருந்து வெளியே செல்வதால்தான், திடீரென அமெரிக்கா, தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கி அமெரிக்கர்களை திருப்திப்படுத்தியுள்ளது என்கின்றனர் இந்திய உளவுத்துறை அதிகாரிகள்.