ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி?
Recommended Video
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையினர் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் காவல் துறையினர் நுழைந்து மாணவ, மாணவிகளை கைகளை மேலே தூக்கியபடி நடக்க விட்டதை கண்டித்து நாடு முழுக்க உள்ள பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி காவல்துறையினர் எந்தவொரு அனுமதியுமின்றி வலுக்கட்டாயமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, ஊழியர்களையும், மாணவர்களையும் அடித்து உதைத்ததாக ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் வசீம் அகமது கான் குற்றம்சாட்டியிருந்தார்.
போராட்டம் பரவியதால், பிடித்து வைக்கப்பட்டிருந்த, ஜாமியா மாணவர்கள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் டெல்லியில் நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது.
சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்கள் வழியாக நாட்டின் மூலை முடுக்கிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது. மாணவர்களின் வாட்ஸ்அப் குழுக்கள், பேஸ்புக், டுவிட்டர் மூலமாக, போலீசார் நடத்திய தாக்குதல் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால் மாணவ சமூகம் பெரும் கோபமடைந்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் (AMU) ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்தினர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், ஜாமியா மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு காவல்துறையினரை கண்டித்தனர்.
|
டெல்லி ஜவஹர்லால் நேரு
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தடுக்க ஏராளமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) மாணவர்கள் டெல்லி காவல்துறைக்கு எதிராக அணிதிரண்டனர். ஜாமியா மற்றும் ஏ.எம்.யூ மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மவுலானா ஆசாத் பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி காவல்துறையினரை அவதூறாக பேசியுள்ளனர்.
|
மெழுகுவர்த்தி ஊர்வலம்
மும்பை, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸைச் சேர்ந்த மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்து, பகத்சிங் போன்ற புரட்சியாளர்களுடன் தொடர்புள்ள புகழ்பெற்ற உருது கவிதை 'சர்பரோஷி கி தமன்னா' முழக்கத்தை பாடினர். ஐ.ஐ.டி பம்பாய் மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களில் இணைந்தனர்.
தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தீப்பந்தங்கள் மற்றும் பதாகைகளுடன் தெருக்களில் வலம் வந்தனர்.
நள்ளிரவு
மும்பையிலிருந்து, சுமார் 1,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாட்னாவிலும் நிலைமை மாறுபாடு இல்லை. பாட்னா பல்கலைக்கழக மாணவர்களும் ஜாமியா மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக போலீசாருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவர்களுக்கு ஆதரவாக நள்ளிரவில் ஊர்வலம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு அவர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களும் ஜாமியாவில் டெல்லி காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா (நத்வா கல்லூரி) மாணவர்களும் தெருக்களுக்கு வந்து ஜாமியா மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.