ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ: நூற்றுக்கணக்கான பயணிகள் தப்பினர்
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நகரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்கிழமை மாலை 4.55 மணிக்கு ஹவுராவில் புறப்பட தயாராக இருந்தது.
பயணிகள் அனைவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். வழியனுப்ப வந்த உறவினர்களுக்கு ரயிலுக்கு வெளியே கூடியிருந்தனர்.
ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்துக்கு முன்பு ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அதையொட்டி இருந்த பயணிகள் பெட்டியின் லக்கேஜ் அறையில் இருந்தும் புகை கிளம்பியது.
திடீர் என்று புகை மூட்டம் மேலும் அதிகரித்தது. புகை வாசனை வருவதை அறிந்த பயணிகள் சத்தம் போட்டு அனைவரையும் உஷார்படுத்தினார்கள். இதற்குள் தீ பரவ ஆரம்பித்தது.
உடனே பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரமாக பெட்டி படுக்கையுடன் கீழே இறங்கினார்கள். ரயில் பெட்டிகளை சரிபார்க்கும் ஊழியர்களும் தீப்பிடித்ததை கண்டுபிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீப்பிடித்த ரயில் பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் புறப்படும் முன் தீ விபத்து ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினார்கள். ரயில் செல்லும்போது தீப்பிடித்து இருந்தால் காற்றின் வேகத்தில் பயணிகள் பெட்டிக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.
ஜெனரேட்டர் பெட்டியில் இருந்து புகை வருவதை முதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் சத்ய நாராயண்யஷ் பார்த்தார். அப்போது ரயில் புறப்பட 2 நிமிடமே இருந்தது. உடனே அவர் என்ஜினுக்கு ஓடிச்சென்று டிரைவரிடம் ரயிலை எடுக்க வேண்டாம், பெட்டியில் புகை வருகிறது என்று உஷார்படுத்தினார். அதன்பிறகுதான் அதிகாரிகள் தகவல் கிடைத்து அங்கு வந்தனர்.
ஜெனரேட்டர் பெட்டியில் சரக்குகள் அறையும் உள்ளது. இதில் சிகரெட் பண்டல்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்துதான் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி இருக்கலாம என்று தெரிய வந்தது. பார்சலை அனுப்பியது யார்? நாசவேலையா? என விசாரணை நடந்து வருகிறது.