தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது மத்திய அரசு !
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி. படித்து வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது குறித்து நீதி விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் இந்துத்துவா அமைப்பினருக்கு எதிராக குரல் எழுப்பியதால் ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் பல்கலைக் கழக விடுதியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டத்தை ரோகித் வெமுலா உள்ளிட்டோர் நடத்தினர்.
இந்நிலையில் ரோகித் வெமுலா திடீரென தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து ரோகித் தற்கொலை செய்துகொண்டது குறித்து நீதி விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உண்மை கண்டறியும் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நீதி விசாரணைக் குழு, 3 மாதங்களுக்குள் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே துயரத்தில் ஆழ்ந்துள்ள வெமுலா குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஹைதராபாத் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக் கழக அதிகாரிகள் இந்தத் தொகைக்கான டிடிஐ ரோகித்தின் தாயார் ராதிகாவிடம் அளிப்பார்கள் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.