50,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் எச்.எஸ்.பி.சி... ஊழியர்கள் கலக்கம்!
மும்பை: வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வரும் எச்.எஸ்.பி.சி நிறுவனம், வங்கியின் லாபத்தை அதிகரிக்க சர்வதேச அளவில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக 50,000 பணியாளர்களைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தைக்கு எச்.எஸ்.பி.சி நிறுவனம் அளித்துள்ள தகவல் மூலம் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
ஐரோப்பாவில் மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி. 50 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது என வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டூவர்ட் குல்லிவெர் தெரிவித்துள்ளார். எச்.எஸ்.பி.சி வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் குறைந்ததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஸ்டூவர்ட், வங்கியின் லாபத்தை அதிகரிக்க நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்று கூறியுள்ளார். இது ஹாங்காங் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான ஆட்குறைப்பு பிரேசில் மற்றும் துருக்கி நாட்டின் கிளைகளில் இருக்கும். லண்டன் கிளைகளில் மட்டும் ஏறக்குறைய 8 ஆயிரம் ஊழியர்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆட்குறைப்பு மூலம், எச்.எஸ்.பி.சி. வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2.58 லட்சமாக குறையும். மேலும், வரும் 2017ம் ஆண்டுக்குள் மேலும், 2.08 லட்சமாகவும் குறைக்கப்படும் என்றும் எச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்த இந்த ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.