பென்ஷன் பணம் வேண்டும்.. மரணத்தை மறைத்து நாடகம்.. அம்மாவின் உடலை பிரிட்ஜில் 3 வருடம் பாதுகாத்த மகன்!
கொல்கத்தாவில் மூன்று வருடம் முன்பு மரணம் அடைந்த பினா மஜூம்தார் என்ற பெண்ணின் உடலை அவரது மகன் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார்.
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் மூன்று வருடம் முன்பு மரணம் அடைந்த பினா மஜூம்தார் என்ற பெண்ணின் உடலை அவரது மகன் பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார்.
இறந்து போன அம்மாவின் பென்ஷன் பணம் தொடர்ந்து வர வேண்டும் என்பதால் அவர் இந்த மோசமான காரியத்தை செய்து உள்ளார். இதற்கு அவரின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
பினா மஜூம்தாரின் மகன் சுபப்ரதா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
மரணம்
பினா மஜூம்தார் ஏப்ரல் 7, 2015ல் மரணம் அடைந்து இருக்கிறார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். ஆனால் இந்த மரணம் குறித்த தகவல் மிகவும் நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்போதில் இருந்து அவரது உடலை சுபப்ரதா பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார்.
பென்ஷன் பணம் வாங்கினார்
பினா மஜூம்தாரின் மகன் சுபப்ரதா மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு திடீர் என்று வேலை போனதை அடுத்து, வருமானத்திற்கு விருப்பப்பட்டு இப்படி செய்துள்ளார். முன்னாள் அரசு ஊழியரான அம்மாவிற்கு வரும் பென்ஷன் பணத்தை வைத்து இவ்வளவு நாள் வாழ்ந்துள்ளார்.
போலீசுக்கு தகவல்
அவரது வீட்டிற்கு சில நாட்களுக்கு முன் உறவினர்கள் வந்த போது, இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். இவ்வளவு நாள், அம்மாவின் உடலை மருத்துவமனைக்கு தானம் வழங்கிவிட்டதால் அவருக்கு இறுதி சடங்கு செய்யவில்லை என்று உறவினர்களை ஏமாற்றி இருக்கிறார்.
காரணம்
முதலில் விசாரித்த போது,. அம்மா மீது இருக்கும் பாசத்தில் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் போலீசின் தொடர் விசாரணையின் முடிவில் அம்மாவின் பென்ஷன் பணத்தை வாங்கவே இப்படி செய்தேன் என்றுள்ளார். ஆனால் இந்த விஷயத்திற்கும் அப்பாவிற்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார். நிறைய முரணான விஷயங்கள் இதில் இருப்பதால் போலீஸ் இதற்கு பின் வேறு காரணம் இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.