விசாகபட்டினம்: புயலிலும் அநியாய விற்பனை... பால் லிட்டர் ரூ 300; தண்ணீர் குடம் ரூ 100!
விசாகபட்டினம்: ஹூட் ஹூட் புயலால் உருக்குலைந்து கிடக்கும் விசாகப்பட்டிணம் உள்ளிட்ட ஆந்திர நகரங்களில் பால் ஒரு லிட்டர் ரூ. 300க்கும், தண்ணீர் குடம் ரூ. 100க்கும் விற்கப் படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் நேற்று முன்தினம் மதியம் ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் அருகே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதோடு, கனமழையும் பெய்தது..
இந்தப் புயலால் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 320 கிராம மக்கள் இப்புயலால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
70 சதவீத மரங்கள்...
இப்புயல் காற்றினால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடும், மின்சார கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் மற்றும் சில வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் உள்ளிட்டவையும் சாய்ந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாகப் பட்டினத்தில் மட்டும் சுமார் 70 சதவீத மரங்கள் சாய்ந்துள்ளதாம்.
26 பேர் பலி...
புயல் மற்றும் கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளதாகவும் 170 பேரை காணவில்லை என்றும் அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
நிவாரண முகாம்கள்...
இதுவரை சுமர் 1.35 லட்சம் மக்கள் மீடகப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டு உள்ளனர். 5,62,000 பேருக்கு இலவச உணவு வழங்கபட்டு வருகிறது.
தவிப்பு...
இது தவிர மின்சாரம்-உணவு இல்லாமல் மேலும் 5 லட்சம் பேர் தவிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பால், குடிநீர் உள்ளிட்ட பொருட்களுக்கும் அங்கு தட்டுப் பாடு நிலவுகிறதாம்.
இட்லி ரூ.20...
இதனால், பால் ஒரு லிட்டர் ரூ 300 வரையும், இட்லி- காபி போன்றவற்றின் விலை ரூ 20க்கும் விற்கப் படுகிறதாம். அதேபோல், ஒரு குடம் குடிதண்ணீர் பெற ரூ. 100 தரப் படுகிறதாம்.
தொலைத்தொடர்பு பாதிப்பு...
அதிக இடங்களில் தொலைத் தொடர்பும் பாதிக்கப் பட்டுள்ளது. பெட்ரோல் கிடைக்காத காரணத்தால் போக்குவரத்து வசதிகளும் குறைந்துள்ளது.
முதல்வர் மேற்பார்வை...
புயல் - மழை சேதாரங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு விசாகபட்டினத்தில் முகாமிட்டு மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.