ஹூட்ஹூட்: ஆந்திரா, ஒடிஸாவில் ரயில், பேருந்து, விமான சேவை நிறுத்தம்
விசாகப்பட்டினம்: ஹூட்ஹூட் புயலால் ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் ரயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்ட ஹூட்ஹூட் புயல் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆந்திரா மற்றும் ஒடிஸா செல்லும் 52 ரயில்கள், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்-பெங்களூர் பிரசாந்தி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்-விசாகப்பட்டினம் இன்டர்சிட்டி, திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்-மும்பை கொனார்க் எக்ஸ்பிரஸ், புரி-சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிஸாவின் கஞ்சம், கஜபதி, ராய்கடா, நபரங்பூர் மற்றும் காலஹந்தி ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தனியார் பேருந்து நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கையில் விசாகப்பட்டினத்தில் மணிக்கு 205 கிமீ வேகத்தில் காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.