ஒடிஷாவின் கோரபுட் மாவட்டத்தை துவம்சம் செய்த ஹூட்ஹூட் புயல்! தொடர்ந்து இருளில் மூழ்கும் நகரங்கள்!!
கோரபுட்: விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த ஹூட் ஹூட் புயல் ஒடிஷாவின் எல்லை மாவட்டமான கோரபுட்டையும் மிக மோசமாகத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் கடந்த ஞாயிறன்று விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி,மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியபடி விசாகப்பட்டினத்தை தாக்கி இப்புயல் அந்நகரையே சின்னாபின்னமாக்கியது.
இந்த புயலால் ஆந்திரா- ஒடிஷா எல்லை மாவட்டமான கோரபுட். மாவட்டமும் நிலைகுலைந்து போயுள்ளது. கோரபுட் மாவட்டத்தின் 14 தாலுக்காளில் 20 இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குட்டியா பழங்குடிகள் அதிகம் வசிக்கும் கிராமங்களுக்கான பெரும்பாலான சாலைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. பொட்டாங்கி, சுங்கி மற்றும் செமிலிகுடா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீட்டர் சாலையில் பல இடங்களில் அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
மேலும் 500 ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் சாகுபடியையும் ஹூட் ஹூட் புயல் சூறையாடியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளில் இப்படியான ஒரு கோரத்தாண்டவ புயலை இப்போதுதான் காண்கிறோம் என்கின்றனர் செமிலிகுடாவாசிகள்.