ஹூட் ஹூட் புயலால் உருக்குலைந்த ஆந்திராவுக்கு ரூ1,000 கோடி நிதி: விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி!
விசாகப்பட்டினம்: "ஹுட்ஹுட்' புயலால் உருக்குலைந்த ஆந்திரா மாநிலத்துக்கு ரூ1,000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான "ஹுட்ஹுட்' புயலானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.
இந்த புயலால் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் பலத்த சேதமடைந்தன.
குடிநீர் விநியோகமும், மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. விமான சேவை, ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் உதவியாக ரூ. 2,000 கோடி வழங்குமாறும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹெலிகாப்டரில் மோடி ஆய்வு- நிதி உதவி அறிவிப்பு
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் பார்வையிட்டார். அவர் ஹெலிகாப்டரில் புயலால் உருக்குலைந்த விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அவருடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரும் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ1,000 கோடி வழங்கப்படும். புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றார்.