உ.பி.யையும் உருக்குலைத்த ஹூட்ஹூட் புயல்- 18 பேர் பலி- பயங்கர சேதம்!!
லக்னோ: ஆந்திரா, ஒடிஷாவை நிலைகுலைய வைத்த ஹூட் ஹூட் புயலின் தாக்கம் தொடர்கிறது. இப்புயலால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மிகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஹூட் ஹூட் புயலானது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஆந்திரா, ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. இதில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரம் நிர்மூலமானது. அதேபோல் ஸ்ரீகாகுளம், விஜயகரம் மற்றும் ஒடிஷாவின் கோரபுட் மாவட்டங்கள் மிகப் பெரிய அழிவைச் சந்தித்தன. மொத்தம் 25 பேர் பலியாகினர்.
இந்தப் புயலின் தாக்கம் அண்டை மாநிலங்களான சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் மிகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதியன்று லக்னோவில் 46.1 மி.மீ மழை பெய்தது. கோரக்பூரில் நேற்று ஒரே நாளில் 61.1 மி.மீ மழை பெய்துள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் வீழ்ந்து கிடப்பதால் மின்சாரம் மிகக் கடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த ஹூட் ஹூட் புயல் கொண்டு வந்து கொட்டிய மழைக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர்.