மோடியைக் கொல்ல மனித வெடிகுண்டாக வந்தோம்.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
பாட்னா: பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்தின்போது அவரைக் கொல்லும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தோம். மேலும் நானும் இன்னொருவரும் மனித வெடிகுண்டுகளாகவும் வந்திருந்தோ்ம். ஆனால் கடைசி நேரத்தில் குண்டு வெடிக்காமல் போனதால் எங்களது நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது என்று போலீஸிடம் சிக்கியுள்ள இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி இம்தியாஸ் தெரிவித்துள்ளான்.
பாட்னா குண்டுவெடிப்பு மோடியைக் குறி வைத்தே நடந்தது என்றும், மோடியைக் கொல்லவே அன்று தொடர் குண்டுவெடிப்பை நிகழத்தியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளான்.
இந்த சதித் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வைத்துத் தீட்டியதாகவும், மனித வெடிகுண்டுகளாக தானும் இன்னொரு தீவிரவாதியும் வந்ததாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளான்.
பாட்னா கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு
பாட்னாவில் நடந்த மோடி கூட்டத்தின்போது மோடி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 7 குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்புக்குப் பின்னரும் மோடி கூட்டம் நடந்தது. மோடியும் பேசிச் சென்றார்.
போலீஸில் சிக்கிய இம்தியாஸ்
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் வைத்து இம்தியாஸ் என்பவனை போலீஸார் கைது செய்தனர். இவனிடம் நடத்திய விசாரணையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது.
மோடிக்கே குறி வைத்தோம்
இம்தியாஸ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது.. மோடியைக் குறி வைத்தே அன்று குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம். ராஞ்சியில் வைத்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரான நாங்கள் இதை தீட்டினோம்.
2 பேருக்குத் தொடர்பு
இரண்டு பேர் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டினோம். அனைத்துக் குண்டுகளையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் வைத்தோம். கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் வைத்தோம்.
மனித வெடிகுண்டாக வந்தோம்
நானும் என்னுடன் வந்த நபரும் மனித வெடிகுண்டுகளாக வந்திருந்தோம். கூட்டத்துக்குள் புகுந்து குண்டுகளாக மாறி வெடித்துச் சிதறி சேதத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம். இதற்காக பொதுக் கழிப்பறை ஒன்றில் புகுந்து எங்களது உடலில் குண்டுகளை கட்டினோம்.
எதிர்பாராமல் குண்டு வெடித்தது
ஆனால் எதிர்பாராமல் ஒரு குண்டு வெடித்து விட்டது. இதில் எனது கூட்டாளி படுகாயமடைந்து விட்டான். இதுதான் பாட்னா ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு (இந்த நபர் தற்போது இறந்து விட்டார்.). எனது குண்டும் செயல்படாமல் போய் விட்டது.
பஸ் மூலம் வந்தோம்
நாங்கள் பஸ் மூலம் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தோம். வந்த வேகத்தில் வேலையில் இறங்கி விட்டோம். எனது கூட்டாளியின் உடலில் வெடித்த குண்டை, கூட்ட மைதானத்தில் வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தவறான இணைப்பால் அந்தக் குண்டு எதிர்பாராமல் வெடித்து விட்டது.
பையில் போட்டுக் கொண்டு வந்தோம்
அத்தனை குண்டுகளையும் இணைப்பு இல்லாமல் பையில் போட்டுக் கொண்டு வந்தோம். கழிப்பறையில் வைத்துத்தான் இணைப்பு கொடுத்தோம். இந்தப் பணியில் எங்களுடன் மொத்தம் 8 பேர் இணைந்து செயல்பட்டனர் என்று கூறியுள்ளான் இம்தியாஸ்.
மோடியைக் கொல்ல மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிகள்
மோடியைக் கொல்ல மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிகள்