ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை- மனித உரிமைகள் அமைப்பினர் போராட்டம்
ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறி மனித உரிமைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அமராவதி: ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்று கூறி மனித உரிமைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகளை கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் போலீஸார் எந்த நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்ட வண்ணம் இருப்பர்.
இந்நிலையில் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 தமிழர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பலை போலீஸார் துரத்தியபோது அவர்கள் ஓடி வந்ததில் 7 பேரும் ஏரியில் விழுந்ததில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
செம்மரம் வெட்டியதற்காக 7 தமிழர்களையும் ஆந்திர போலீஸாரே கொன்று ஏரியில் வீசிவிட்டனர் என்று கூறி ஆந்திராவில் மனித உரிமை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இறந்தவர்களில் இருவர் சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த கருப்பன், முருகேசன் என தெரியவந்துள்ளது. ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த தமிழர்கள் குறித்து விவரம் அறிய அம்மாநில போலீசார் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.