உலக மனிதநேய தினம்... காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக மமதா ட்வீட்டால் சர்ச்சை!
கொல்கத்தா: ஐ.நா. சபையால் உலக மனிதநேய தினம் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இதையடுத்து அம்மாநிலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகம் அறியாமல் இருக்கிறது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Today is World Humanitarian Day. Human rights have been totally violated in #Kashmir. Let us pray for human rights and peace in #Kashmir 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019
ஆனால் மத்திய அரசும் ராணுவமும் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுவதாக கூறி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கங்களில் எழுப்புவோம் என பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவருகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச மனிதாபிமான நாள் ஐ.நா.சபையால் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இன்று உலக மனித நேய நாள். காஷ்மீரில் மனித உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன. காஷ்மீரில் மனித உரிமைகள் மதிக்கப்படவும் அமைதி நிலவவும் பிரார்த்திப்போம் என கூறியுள்ளார்.
Human rights is a subject very close to my heart. In 1995, I was on the road for 21 days to protect human rights violations against deaths in lock-ups 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019
மேலும் 1995-ம் ஆண்டு மனித உரிமைகளை பாதுகாக்க- லாக்கப் மரணங்களுக்கு எதிராக 21 நாட்கள் போராட்டம் நடத்தியதையும் மமதா ட்விட்டரில் நினைவுகூர்ந்துள்ளார். இந்திய அரசுக்கு எதிரான பிற நாடுகளின் ஒரு ஆயுதமாக ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் நாட்டின் ஒரு மாநிலத்தின் முதல்வரே வெளிப்படையாக காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.