ஜெய்ப்பூரில் பாதி கட்டப்பட்ட கட்டிடத்தில் கிடந்த முழு மனித எலும்புக்கூடு
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் பாதிக் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருந்து முழு மனித எலும்புக்கூடு ஒன்று கைப்பற்றப் பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், பிரதாப் நகர் காவல் சரகத்திற்குட் பட்ட பம்பாலா காட்டுப்பகுதியில் பாதி கட்டப்பட்ட நிலையிலான ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் மனித எலும்புக் கூடு ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் சார்பில் போலீசுக்கு தகவல் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாருடன் தடயவியல் வல்லுநர்களும் உடன் சென்றனர்.
சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று அந்த இடத்திற்கு இரண்டு கூலிவேலை செய்பவர்களை வேறு இரண்டு நபர் வலுக்கட்டாயமாகக் கூட்டி வந்ததும், அவர்கள் கூலி வேலை தொழிலாளர்களை குடிக்குமாறு வற்புறுத்தியதும், குடிக்க மறுத்த அவர்கள் தாக்கப் பட்டதும் தெரிய வந்துள்ளது.
பின்னர், அங்கிருந்து கூலித் தொழிலாளிகள் தப்பித்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அடி கொடுத்த நபர்களும் அங்கிருந்து தலை மறைவாகியுள்ளனர்.
தப்பித்து ஓடி வந்த தொழிலாளிகள் ஊருக்குள் வந்து பொதுமக்களிடம் அளித்த தகவலின் பேரிலேயே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் சிலர். அப்போது தான் அங்கு மனித எலும்புக் கூடு இருந்ததைக் கண்டு போலீசுக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது.
யாருடைய எலும்புக்கூடு அது? எப்படி இந்த இடத்திற்கு வந்தது ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.