பசி.. மனஉளைச்சல்.. உச்ச நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல் போட்ட கோவை நபரால் பரபரப்பு!
மனஉளைச்சல் காரணமாக, கோயம்புத்தூரை சேர்ந்த பாபு என்ற நபர் டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல் எழுப்பி இருக்கிறார்.
டெல்லி: மனஉளைச்சல் காரணமாக, கோயம்புத்தூரை சேர்ந்த பாபு என்ற நபர் டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் கத்தி கூச்சல் எழுப்பி இருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதவி செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக பாபு உச்ச நீதிமன்ற வளாகத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு போதுமான மருத்துவ உதவிகளை வழங்கவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
தோல்வி அடைந்தார்
கோவையை சேர்ந்த பாபு, தனது வழக்கு ஒன்றுருக்காக டெல்லி உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். சென்னை ஹைகோர்ட்டில் நடந்த வழக்கில் தோல்வி அடைந்த காரணத்தால் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் அவர் டெல்லி வந்துள்ளார்.
சாப்பாடு ஓய்வு இல்லை
ஆனால் வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர், உணவு இல்லாமல் உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே ஓய்வு எடுத்துள்ளார். அதேபோல் கடந்த ஐந்து நாட்களாக இவர் சரியாக சாப்பிடவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். என்ன வழக்கு சம்பந்தமாக இவர் டெல்லியில் மேல்முறையீடு செய்தார் என்று தகவல் வெளியாகவில்லை.
அலைக்கழிப்பு
ஆனால் உச்ச நீதிமன்ற அதிகாரிகள் இவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. போதிய ஆவணங்கள் இல்லை என்று இவரை திரும்பி போக சொல்லி இருக்கிறார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான, இவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
வளாகத்திலேயே தரையில் அமர்ந்து இவர் கத்தி கூச்சலிட்டு கோஷம் போட்டுள்ளார். இதனால் போலீசார் உடனே அவரை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.