புதிய தேஜாஸ் திட்ட இயக்குநரை தேர்வு செய்யும் வேட்டை தொடக்கம்
பெங்களூர்: மத்திய அரசின் டிஆர்டிஓ நிறுவனம், புதிய ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (அடா) இயக்குநர் மற்றும் தேஜாஸ் திட்ட இயக்குநரைத் தேர்வு செய்யும் பணியை முடுக்க விட்டுள்ளது.
இந்தப் பதவியில் இதுவரை இருந்து வந்த பி.எஸ்.சுப்ரமணியம் ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த இயக்குநரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி சுப்ரமணியம் ஓய்வு பெற்றார். நீண்ட அடா இயக்குநராக பணியாற்றியவர் சுப்ரமணியம். விஜயவாடாவைச் சேர்ந்தவர்.
2005 ஆம் ஆண்டு அவர் அடா தலைவரானார். தற்போது புதிய இயக்குநர் தேர்வை மேற்கொள்ள பிரபல விஞ்ஞானி டாக்டர் வாசுதேவ் கல்குண்டே ஆத்ரே தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது டிஆர்டிஓ.
76 வயதான ஆத்ரே, முன்னாள் டிஆர்டிஓ தலைவர் ஆவார். பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் கூட. பல்வேறு விமானவியல் கழகங்களில் உறுப்பினராக இருப்பவர்.
இந்தத் தேடுதல் கமிட்டியில் இவர் போக, டிஆர்டிஓவின் மூத்த இயக்குநர் ஜெனரல் டாக்டர் கே.தமிழ் மணியும் இடம் பெற்றுள்ளார். புதிய இயக்குநர் அடாவிலிருந்தே தேர்வு செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. காரணம் அப்போதுதான் இலகு ரக விமானத் திட்டத்தை மேற்கொண்டு தொடருவது எளிதாக இருக்கும் என்பதால்.
அனைத்துத் தகுதிகளையும் வைத்துப் பார்ப்பதாக இருந்தால் கடற்படைக்கான எல்சிஏ திட்ட இயக்குநர் சி.டி.பாலாஜிதான் அடுத்த இயக்குநவர் பொறுப்புக்குச் சரியானவர் என்று கருதப்படுகிறது.
அதேபோல அடாவின் பொதுத் திட்ட தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.சுவாமிநாதனும் சரியான சாய்ஸாக இருப்பார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாலாஜி ஓய்வு பெறவுள்ளார். அதேசமயம், சுவாமிநாதனுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் உள்ளது.